Published : 06 Oct 2020 10:59 AM
Last Updated : 06 Oct 2020 10:59 AM

'ஆர்ஆர்ஆர்' படப்பிடிப்பு தொடக்கம்: ஜூனியர் என்.டி.ஆர் லுக் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஆர்ஆர்ஆர்’ படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.

'பாகுபலி' படத்துக்குப் பிறகு ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

'பாகுபலி' படத்தைப் போலவே இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 8-ம் தேதி வெளியீட்டுக்குத் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கரோனா ஊரடங்கினால் படப்பிடிப்பு பணிகள் பாதிக்கப்பட்டதால் குறிப்பிட்ட தேதியில் வெளியீட்டுக்குச் சாத்தியமில்லை என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு நேற்று (05.10.20) முதல் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' படத்தின் படப்பிடிப்பு ஹைதரபாத்தில் தொடங்கியுள்ளது. இதற்கான காணொலியை ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழுவினர் தங்கள் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

அடுத்த இரண்டு மாத காலத்துக்கு இடைவெளி இன்றி தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர். ஆலியா பட் தொடர்பான காட்சிகள், கிராபிக்ஸ், எடிட்டிங் உள்ளிட்ட பணிகள் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இந்த இரண்டு மாத காலத்தில் முடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ‘பீம்’ கதாபாத்திரத்துக்கான டீஸர் அக்டோபர் 22ஆம் தேதியன்று வெளியிடப்படும் என்றும் அந்த காணொலியில் கூறப்பட்டுள்ளது.

கடந்த மே 20-ம் தேதி ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் ஜூனியர் என்.டி.ஆருக்கான டீஸர் வெளியாகும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், கரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால் அது சாத்தியமில்லை என்று ராஜமௌலி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x