ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணியிடம் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி

ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணியிடம் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி
Updated on
1 min read

பெங்களூருவில் போதைப் பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு வழக்கில் கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்ட 28 பேரை போலீஸார் கைது செய்தனர். குற்றப்பிரிவு போலீஸாரின் விசாரணை முடிந்ததைத் தொடர்ந்து பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பெங்களூரு மாநகர முதல் அமர்வு நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் பிரசன்ன குமார் அமலாக்கத்துறை சார்பில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் ‘‘இவ்வழக்கில் கைதான நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி, விருந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் விரேன் கண்ணா, ஆர்.டி.ஓ. ஊழியர் ரவிசங்கர், ஓட்டல் அதிபர் ராகுல் டோன்ஸ் ஆகியோரின் சொத்துமதிப்பு கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது.

இவர்கள் போதைப் பொருள் விற்பனை மூலமான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்துள்ளது. மேலும் இவ்வழக்கில் போலீஸாருக்கு ரூ. 50 லட்சம் வரை லஞ்சம் கொடுக்க முன்வந்துள்ளனர். விசாரணை தகவல்களை சொன்னதற்காக துணை காவல் ஆணையர் மாதவிக்கு ரூ.12 லட்சம் லஞ்சமாக கொடுத்துள்ளனர். இதனால் மாதவி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். எனவே பண மோசடி, வெளிநாட்டு பண பயன்பாடு, வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு ஆகியவை தொடர்பாக ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்ட 5 பேரிடம் 7 நாட்கள் விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும்’’ என கோரப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 5 பேரிடமும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in