சிரஞ்சீவியின் சகோதரருக்குக் கரோனா தொற்று

சிரஞ்சீவியின் சகோதரருக்குக் கரோனா தொற்று
Updated on
1 min read

நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் நாக பாபுவுக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நாக பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தெலுங்குத் திரையுலகில் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வருபவர் நாக பாபு. இவர் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் சகோதரர் ஆவார். இவருடைய மகன் வருண் தேஜ் மற்றும் மகள் நிஹாரிகா இருவருமே திரையுலகில் நடிகர்களாக வலம் வருகிறார்கள்.

தனியார் தொலைக்காட்சிக்கு நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கி வருகிறார் நாக பாபு. இதற்கான படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு வருகிறார். திடீரென அவருக்குக் கரோனா தொற்று அறிகுறி இருந்ததால், பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தனது நிலை குறித்துப் பதிவிட்டுள்ள நாக பாபு, "தொற்று என்பது எப்போதுமே அவதிப்படுவதாக ஆகாது. மற்றவர்களுக்கு உதவும் ஒரு வாய்ப்பாக அதை நாம் மாற்றிக் கொள்ளலாம். எனக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் போராடி வெல்வேன். பிளாஸ்மா தானம் செய்யும் நபராக மாறுவேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

நாக பாபு வீட்டுத் தனிமையில் இருக்கிறார். அவரது இந்தப் பகிர்வைப் பார்த்ததும் அவரைப் பின்தொடரும் குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் என அனைவரும் அவர் சீக்கிரம் நலம் பெற வேண்டும் என்று வாழ்த்தியுள்ளனர். சகோதரர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியிலும் நாக பாபு பங்கெடுத்துள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in