Published : 08 Jun 2020 10:17 AM
Last Updated : 08 Jun 2020 10:17 AM

'ஆர்.ஆர்.ஆர்' அப்டேட்: கவுரவ கதாபாத்திரத்தில் ஸ்ரேயா

'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.

'பாகுபலி' படத்துக்குப் பிறகு ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. 'பாகுபலி' படத்தைப் போலவே இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் கிராபிக்ஸ் பணிகள், இறுதிக்கட்டப் பணிகள், இறுதிக்கட்டப் படப்பிடிப்பு என அனைத்துமே கரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே தனது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, தான் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் நடிக்கவுள்ளதை ஸ்ரேயா உறுதி செய்துள்ளார். ராஜமெளலி எப்போது படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்பதை தெரிவித்தவுடன், இந்தியாவுக்கு வரவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் ஸ்ரேயா. 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் அஜய் தேவ்கானுக்கு மனைவியாக சிறு கதாபாத்திரத்தில் ஸ்ரேயா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படம் 2021-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தலால் இப்போது அந்த வெளியீட்டுத் தேதி மாறும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x