

கேரளாவில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுடன் உரையாடி, பாடல் பாடி பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார் மோகன்லால்.
தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து சென்னையிலிருக்கும் தனது இல்லத்திலிருந்து வரும் நடிகர் மோகன்லால், இன்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜாவோடும், கேரளா முழுவதும் இருக்கும் 250 சுகாதாரப் பணியாளர்கள், நிபுணர்களுடனும் உரையாடி அவர்களின் சமூக சேவைக்குப் பாராட்டு தெரிவித்தார்.
இந்த ஒரு மணிநேர உரையடாலின் சிறப்பே இந்தப் பணியாளர்களுக்காக மோகன்லால் பாடியதுதான். 1972 ஆம் ஆண்டு வெளியான 'ஸ்னேஹதீபமே மிழி துரக்கு' என்ற படத்தின் பிரபலமான லோகம் முழுவேன் சுகம் என்ற பாடலை மோகன்லால் பாடினார்.
தங்களது கஷ்டங்களை மறந்து சமூகத்துக்காக உயர்ந்த சேவையைச் செய்து வரும் ஒவ்வொரு பணியாளருக்கும் நன்றி தெரிவித்த மோகன்லால், வரும் நாட்கள் மாநிலத்துக்கும் மிக முக்கியமானதாக இருக்கும் என்று சுட்டிக்காட்டினார்.
இந்த உரையாடலின்போது, கன்னூர் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் என்.ராய், தானும் மோகன்லாலும், திருவனந்தபுரத்தில் அரசுப் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்ததை நினைவுகூர்ந்தார். இதைக் கேட்டு மோகன்லால் மகிழ்ச்சியடைந்தார்.
பணிச்சுமை அதிகமாகயிருக்கும் சுகாதாரத்துறையைச் சேர்ந்தவர்களுடன் உரையாடியதற்காக அமைச்சர் ஷைலஜா மோகன்லாலுக்கு நன்றி தெரிவித்தார். கேரள முதல்வர் கோவிட் நிவாரண நிதிக்கு மோகன்லால் ரூ.50 லட்சம் நிதி அளித்தது குறிப்பிடத்தக்கது.