கரோனா முன்னெச்சரிக்கை: 'அசுரன்' தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு பாதிப்பு

கரோனா முன்னெச்சரிக்கை: 'அசுரன்' தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு பாதிப்பு
Updated on
1 min read

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், 'அசுரன்' படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'அசுரன்'. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இதன் தெலுங்கு ரீமேக் உரிமையை கடும் போட்டிக்கு இடையே சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் கைப்பற்றியது.

தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடித்து வருகிறார். சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் தாணு இருவரும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் ப்ரியாமணி நடித்து வருகிறார். ஸ்ரீகாந்த் அட்டாலா இயக்கி வருகிறார்.

'நாராப்பா' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்கத் திட்டமிடப்பட்டது. நீண்ட நாட்களாகத் தமிழக எல்லையோரத்தில் நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பு கரோனா முன்னெச்சரிக்கை காரணமாக முதன்முறையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பதிவில், "சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் வரலாற்றில் மிக நீண்ட படப்பிடிப்பு. தற்போது 'நாராப்பா' படம் படப்பிடிப்பு கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

படக்குழுவினர் ஹைதராபாத் திரும்பியுள்ளனர். சூழ்நிலை சீரானதும் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும். முடிந்தவரை அனைவரும் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்க விரும்புகிறோம். நலமாகவும் பாதுகாப்புடனும் இருக்கவும்" என்று தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in