'தெறி' ரீமேக்கா? - இயக்குநர் கோபிசந்த் மாலினேனி மறுப்பு

'தெறி' ரீமேக்கா? - இயக்குநர் கோபிசந்த் மாலினேனி மறுப்பு
Updated on
1 min read

ரவிதேஜா உடன் இணையும் படம் 'தெறி' ரீமேக்கில்லை என்று இயக்குநர் கோபிசந்த் மாலினேனி மறுப்பு தெரிவித்துள்ளார்.

விஜய் - அட்லி முதன் முறையாக இணைந்து பணிபுரிந்த படம் 'தெறி'. 2016-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் சமந்தா, ஏமி ஜாக்சன், மறைந்த இயக்குநர் மகேந்திரன், 'நான் கடவுள்' ராஜேந்திரன், ராதிகா, அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் குறித்து பலமுறை செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், எதுவுமே படமாகத் தொடங்கப்படவில்லை. இதனிடையே கோபிசந்த் மாலினேனி - ரவிதேஜா இணையும் படம் 'தெறி' படத்தின் ரீமேக் தான் எனத் தகவல்கள் வெளியாகின.

இதில் ஸ்ருதிஹாசன், வரலட்சுமி என இரண்டு நாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டதால், 'தெறி' ரீமேக்காகத் தான் இருக்கும் எனக் கருதினார்கள். ஆனால், இயக்குநர் கோபிசந்த் மாலினேனி தனது ட்விட்டர் பதிவில் "ரவிதேஜா உடன் இணையும் படம் 'தெறி' ரீமேக் அல்ல" என்று தெரிவித்துள்ளார். இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கவுள்ளார். மது தயாரிக்கவுள்ளார்.

போலீஸ் கதாபாத்திரத்தில் ரவிதேஜா நடிக்கவுள்ளதால், இந்த 'தெறி' ரீமேக் வதந்தி வெளியாகி இருக்கக் கூடும் எனத் தெரிகிறது. தற்போது ஆனந்த் இயக்கத்தில் ‘டிஸ்கோ ராஜா’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் ரவி தேஜா. இந்தப் படத்தைத் தொடர்ந்து கோபிசந்த் மாலினேனி படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in