

நாகேஷ் குக்குநூர் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ள புதிய படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.
'நடிகையர் திலகம்' படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, கீர்த்தி சுரேஷுக்கு பல மொழிகளில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. அதிலிருந்து மிக கவனமாக தேர்வு செய்து ஒப்பந்தமாகி வருகிறார்.
'நடிகையர் திலகம்' படத்துக்குப் பிறகு ப்ரியதர்ஷன் இயக்கி வரும் 'மாராக்கர்' மற்றும் தெலுங்கில் நரேந்திரநாத் இயக்கி வரும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். அதனைத் தொடர்ந்து இந்தியில் அறிமுகமாகவுள்ளார் கீர்த்தி சுரேஷ். இப்படத்தினை அமித் சர்மா இயக்கவுள்ளார்.
இந்நிலையில், நாகேஷ் குக்குநூர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கத் தொடங்கியுள்ளார் கீர்த்தி சுரேஷ். முழுக்க பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்தியே இப்படம் உருவாகிறது. விளையாட்டு பின்புலத்தில் உருவாகும் இப்படத்தில் ஆதி, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
சுதீர் சந்திரா தயாரிக்கும் இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கவுள்ளார். புனேவில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 2019-ல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.