ஆர்ஆர்ஆர் அனைத்து தரப்புக்குமான படம்: எஸ்.எஸ்.ராஜமௌலி

ஆர்ஆர்ஆர் அனைத்து தரப்புக்குமான படம்: எஸ்.எஸ்.ராஜமௌலி
Updated on
1 min read

தான் அடுத்து இயக்கிக் கொண்டிருக்கும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம், தேசிய அளவில் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் என இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி கூறியுள்ளார்.

'பாகுபலி 1' மற்றும் 2 என இரண்டு படங்களால், உலகத்தின் பார்வையை இந்திய சினிமாவின் பக்கம் திருப்பியவர் ராஜமௌலி. இவரது படங்களில் பிரம்மாண்டம், கதை சொல்லும் முறை, கிராபிக்ஸ் ஆகிய அம்சங்கள் எப்போதும் கவனிக்க வைப்பவை.

பாகுபலிக்கு முன்னும், 'விக்ரமார்குடு', 'சத்ரபதி', 'ஈகா', ‘மகதீரா’ எனத் தொடர்ந்து பல்வேறு சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்தவர் ராஜமௌலி. தற்போது, ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் நடிக்க, ’ஆர்.ஆர்.ஆர்’ (’RRR’) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இதன் பட்ஜெட் கிட்டத்தட்ட ரூ. 300 கோடி என சொல்லப்படுகிறது.

சமீபத்தில், ஹார்வர்ட் இந்தியா பேரவை என்ற நிகழ்ச்சியில் ராஜமௌலி கலந்துகொண்டார். அப்போது அவரிடம் இந்தப் படத்தைப் பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஜமௌலி, "ஆர்.ஆர்.ஆர் திரைப்படம், தேசிய அளவில் அனைத்துத் தரப்புக்குமான படம். ஏனென்றால் கதையின் தன்மை அப்படி இருக்கிறது. இதற்கு மேல் படம் பற்றி வேறு கேள்விகள் கேட்காதீர்கள்" என்று முடித்துக் கொண்டார். 

படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத் ராமோஜி பிலிமி சிட்டியில் நடந்து வருகிறது. இதற்கு முன்னர் ராம்சரணுடன் 'மகதீரா' படத்திலும், ஜூனியர் என்.டி.ஆருடன் 'ஸ்டூடண்ட் நம்பர் 1', 'யமதொங்கா' ஆகிய படங்களிலும் ராஜமௌலி பணிபுரிந்துள்ளார். 'ஸ்டூடண்ட் நம்பர் 1', இயக்குநராக ராஜமௌலியின் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in