திரைப்பட விமர்சகருக்கு மிரட்டல் விடுத்து சர்ச்சையில் சிக்கிய ஜோஜூ ஜார்ஜ்

திரைப்பட விமர்சகருக்கு மிரட்டல் விடுத்து சர்ச்சையில் சிக்கிய ஜோஜூ ஜார்ஜ்
Updated on
1 min read

திருவனந்தபுரம்: தான் இயக்கி நடித்த ‘பனி’ திரைப்படம் குறித்து எதிர்மறையான விமர்சனத்தை வெளியிட்ட விமர்சகரை தொலைபேசியில் அழைத்து நடிகரும், இயக்குநருமான ஜோஜூ ஜார்ஜ் மிரட்டியுள்ளார். அவரின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ஜோஜூ ஜார்ஜ் இயக்குநராக அறிமுகமாகியுள்ள மலையாள திரைப்படம் ‘பனி’. கடந்த அக்டோபர் 24-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படம் குறித்து ஆதர்ஷ் என்பவர் எதிர்மறையான விமர்சனத்தை வெளியிட்டார். இதற்காக அந்த விமர்சகரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஜோஜூ ஜார்ஜ் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் முடிந்தால் தன்னுடன் நேரடியாக மோதும்படி சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக விமர்சகர் ஆதர்ஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “பனி படத்தில் இடம்பெற்றிருந்த பாலியல் வன்கொடுமை காட்சி குறித்து நான் எதிர்மறையாக விமர்சனத்தை வெளியிட்டிருந்தேன். ஒரு திரைப்படத்தில் பாலியல் வன்கொடுமை காட்சியை காட்சிப்படுத்தும்போது, அது பார்வையாளர்களின் அனுதாபத்தை தூண்டும் வகையில் இருக்க வேண்டும். ஆனால், ஜோஜூ ஜார்ஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பெண்களை காட்சிப்பொருளாக சித்தரிக்கும் வகையில் கிட்டத்தட்ட ‘பி கிரேடு’ படத்துக்கு ஒப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதை நான் சொன்னதற்காக ஜோஜூ ஜார்ஜ் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘தைரியம் இருந்தால் நேருக்கு நேர் மோது’ என மிரட்டல் விடுத்தார். நான் இதற்கெல்லாம் பயப்படுபவனில்லை. அவர் இது போல மற்றவர்களுக்கு மிரட்டல் விடுக்க கூடாது என்பதற்காக தான் இந்த வீடியோவை வெளியிட்டேன்” என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in