‘டபுள் ஐஸ்மார்ட்’ பாடலில் சர்ச்சை வரிகள்: இயக்குநர் புரி ஜகன்நாத் மீது போலீஸில் புகார்

‘டபுள் ஐஸ்மார்ட்’ பாடலில் சர்ச்சை வரிகள்: இயக்குநர் புரி ஜகன்நாத் மீது போலீஸில் புகார்
Updated on
1 min read

ஹைதராபாத்: தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் பேசிய வார்த்தைகளை சர்ச்சையான முறையில் பாடலில் பயன்படுத்தியதாக ’டபுள் ஐஸ்மார்ட்’ பட இயக்குநர் புரி ஜகன்நாத் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

'ஐஸ்மார்ட் ஷங்கர்' படத்தின் இரண்டாம் பாகத்துக்கு ‘டபுள் ஐஸ்மார்ட்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. ராம் பொதினேனி நடிக்கும் புரி ஜெகன்நாத் இயக்குகிறார். இப்படத்தில் இடம்பெற்ற ‘மார் முந்தா சோட் சிந்தா’ என்ற பாடல் அண்மையில் வெளியானது. இப்பாடலை காசர்லா ஷியாம் என்பவர் எழுத, மணிசர்மா இசையில் ராகுல் சிப்ளிகஞ்ச், கீர்த்தனா சர்மா பாடியுள்ளனர்.

இப்பாடலில் சர்ச்சைக்குரிய வரிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி இயக்குநர் புரி ஜெகன்நாத் மீது பிஆர்எஸ் (பாரத் ராஷ்ட்ரிய சமிதி) கட்சியின் மூத்த நிர்வாகியான ரஜிதா ரெட்டி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் தனது பேச்சின் இடையே பயன்படுத்திய ‘நாங்கள் என்ன செய்ய வேண்டும்?’ என்ற வரியை இப்பாடலில் ஆபாசமான முறையில் பயன்படுத்தியிருப்பதாகவும், இதற்காக இயக்குநர் மீதும் பாடலாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

ராம் பொதினேனி, புரி ஜெகன்நாத் மீண்டும் இணையும் ’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தை சார்மி கவுர் மற்றும் புரி ஜெகன்நாத் இணைந்து தயாரிக்கின்றனர். பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in