‘தேவாரா’ படப்பிடிப்பில் செல்போனுக்கு தடை

‘தேவாரா’ படப்பிடிப்பில் செல்போனுக்கு தடை
Updated on
1 min read

ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர் நடித்து வரும் படம், ‘தேவாரா’. இந்தப் படத்தின் மூலம் ஜான்வி கபூர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார். இதில் சைஃப் அலிகான், பிரகாஷ்ராஜ், நரேன், கலையரசன், ஷைன் டாம் சாக்கோ உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படம் 2 பாகங்களாக உருவாகிறது. கொரட்டலா சிவா இயக்குகிறார்.

தெலுங்கு, இந்தி, தமிழ் உட்பட 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தின் முக்கியமான வசனக்காட்சி சமீபத்தில் இணையத்தில் கசிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழு, பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது.

இனி எந்தக் காட்சியும் கசியாமல் இருக்க, தேவையானவர்களை மட்டுமே படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் பயன்படுத்தவும் ஆட்களை குறைக்கவும் முடிவு செய்துள்ளனர். அதோடு செட்டுக்குள் புகைப்படம், வீடியோ எடுப்பதைத் தடுக்க செல்போன் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

“பார்வையாளர்கள் ரசிக்கக் கூடிய வகையில் சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்க உழைத்து வருகிறோம்.அதில் இதுபோன்ற செயல்களை இனியும் அனுமதிக்க முடியாது” என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இறுதிக்கட்டத்தை நெருங்கும் இந்தப் படத்தின் பாடல் காட்சி படப்பிடிப்பு, தெலங்கானாவில் உள்ள சம்சாபாத்தில் நாளை தொடங்குகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in