Published : 06 Dec 2023 06:21 PM
Last Updated : 06 Dec 2023 06:21 PM

‘கண் கண்டது நிஜம்; காணாதது பொய்’ - ‘மலைக்கோட்டை வாலிபன்’ டீசர் எப்படி?

லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. மலையாளத்தில், ‘ஜல்லிக்கட்டு’, ‘அங்கமாலி டைரிஸ்’, ‘சுருளி’,‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இவர் மோகன்லால் நடிப்பில் ‘மலைக்கோட்டை வாலிபன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஜனவரி 18-ம் தேதி ராஜஸ்தானில் இதன் படப்பிடிப்புத் தொடங்கியது. அங்கு பொக்ரானில் ஏராளமான வெளிநாட்டு துணை நடிகர்களுடன் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.

மோகன்லால், மணிகண்டன் ஆர். ஆச்சாரி, சோனாலி குல்கர்னி மற்றும் ஹரீஷ் பேரடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரசாந்த் பிள்ளை இசையமைக்கும் இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

டீசர் எப்படி? - ‘கண் கண்டது நிஜம்; காணாதது பொய், நீ கண்டதெல்லாம் பொய். இனி காணப்போவது நிஜம்’ என்ற வசனத்துக்குள்ளேயே மொத்த டீசரும் அடங்கிவிடுகிறது. மோகன்லாலின் இன்ட்ரோ காட்சியாக மட்டுமே டீசர் அமைந்துள்ளது. புதுமையான மோகன்லாலின் கெட்டப்பும், பிரசாந்த் பிள்ளையின் பின்னணி இசையும் டீசரில் கவனம் பெறுகிறது. தனது படங்களில் தனித்துவத்தை கையாளும் லிஜோ ஜோஸ் இந்தப் படத்தில் என்ன மாதிரியான ஆச்சரியங்களை வைத்துள்ளார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். படம் ஜனவரி 25-ம் தேதி வெளியாகிறது. டீசர் வீடியோ:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x