

செய்த கொலைக்காகத் தப்பித்தவன் செய்யாத கொலைக்காகத் தண்டிக்கப்படுவதே ‘த போஸ்ட்மேன் ஆல்வேஸ் ரிங்ஸ் ட்வைஸ்’ (The Postman Always Rings Twice – 1946) என்ற திரைப்படத்தின் ஒருவரிக்கதை. சான் ஃபிரான்சிஸ்கோவில் இருந்து சான் டியாகோவுக்கு லிப்ட் கேட்டு காரில் பயணிக்கும் ஃபிராங்க் சேம்பர்ஸ் என்கிற நாடோடி இளைஞனை சாலையோர உணவகமான ‘ட்வின் ஓக்ஸ்’ முன் இறக்கி விடுகிறார் மாவட்ட வழக்கறிஞர் கைல் சேக்கெட்.
உணவக உரிமையாளர் நிக் ஸ்மித் அவனை உற்சாகமாக வரவேற்று அங்கேயே தங்கி வேலை பார்க்கச் சொல்கிறார். எப்போதும் லிப்ஸ்டிக்கும் உதடுமாக இருக்கும் நிக்கின் இளம் மனைவி கோரா ஸ்மித்தை அங்கு சந்திக்கிறான் ஃபிராங்க்.
ஆரம்பத்தில் கோராவுக்கு அவனைப் பிடிக்கவில்லை. வேலையை விட்டு அனுப்ப நினைக்கிறாள். கணவன் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. ஃபிராங்கிற்கு வேலை கொடுப்பதற்காக அங்குள்ள நாற்காலிகளுக்கு வண்ணம் பூசச் சொல்கிறாள். ஃபிராங்க் அவளை இறுகப் பற்றி அவள் இதழில் வண்ணம் பூசி விடுகிறான்.
எந்த பதற்றமும் இல்லாமல் சாயம் கலைந்த உதடுகளை லிப்ஸ்டிக்கால் சரி செய்கிறாள் கோரா. அந்த நொடியிலிருந்து அவர்களுக்குள் ஈர்ப்பு உருவாகிறது. தன்னை காதலிக்காத ஒருவனுடன் திருமணம் செய்து கொண்டு வாழ்வதும், தாங்களே சொந்தமாக நடத்தும் உணவகத்தில் வேலை செய்வதும் கோராவுக்குப் பிடிக்கவில்லை.
கணவனை கடற்கரைக்கு நீச்சலுக்கு அழைக்க அவன் மறுக்க, ஃபிராங்க் அவளுடன் சென்று நீச்சலடிக்கிறான். கணவன் மறுக்கும் இடத்துக்கெல்லாம் ஃபிராங்க் உடன்வர, நாளடைவில் இருவரும் காதல் வயப்பட்டு ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு நகரைவிட்டு ஓடுகிறார்கள்.
புது இடங்களில்அலையும்போதுதான் கோராவுக்கு கோரமான உண்மை புலப்படுகிறது. நிக்கை விவாகரத்து செய்தால் தனக்கு எதுவுமே கிடைக்காது என்பதை உணர்ந்தவள், ஃபிராங்கை அழைத்துக் கொண்டு மீண்டும் ‘ட்வின் ஓக்ஸ்’ உணவகத்துக்கே திரும்புகிறாள். தான் எழுதி வைத்த கடிதத்தை நிக் படிப்பதற்கு முன்பே லாவகமாக எடுத்துவிடுகிறாள்.
அதன்பின்னர் கோரா, ஃபிராங்குக்கு ஓர் அதிர்ச்சியான திட்டத்தைச் சொல்கிறாள். பல விபத்துகள், வீடுகளின் குளியலறையில் நடப்பதாக அவள் பத்திரிகைகளில் படித்திருக்கிறாள். அதைப் போலவே நிக்கைக் கொலை செய்து விபத்தாகக் காட்டலாம் என்கிறாள். முதலில் தயங்கினாலும், அவள் மீதுள்ள ஈர்ப்பால் சம்மதிக்கிறான் ஃபிராங்க். ஒரு சாக்ஸில் இரும்புப் பந்துகளை நிரப்பி நிக்கின் தலையில் அடித்து மயக்கி, குளியலறையில் அவர் விழுந்து இறந்ததாகக் காட்ட வேண்டும் என்பதே திட்டம்.
ஆனால் விஷயங்கள் திட்டமிட்டபடி நடக்கவில்லை. ஒரு போலீஸ் அதிகாரி அங்கு வருவதும், ஒரு பூனை மின்சாரத்தைத் துண்டிக்கச் செய்வதும் சூழ்நிலையை மாற்றி விடுகின்றன. ஆனாலும் இருட்டில் கோரா நிக்கின் தலையில் பலமாக அடித்து காயப்படுத்துகிறாள். நிக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் தப்பிக்கிறார். நடந்த சம்பவங்கள் அவருக்கு நினைவில் இல்லை.
மருத்துவமனையிலிருந்து மீண்டு வரும் நிக், அந்த உணவகத்தை விற்றுவிட்டு கனடா செல்லப் போவதாகவும். அங்கு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தன் சகோதரியை கோரா பராமரிக்க வேண்டும் என்றும் குண்டைத் தூக்கிப் போடுகிறார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கோரா, தற்கொலைக்கு முயற்சிக்கிறாள். தடுக்கும் ஃபிராங்க், வேறு வழியின்றி நிக்கைக் கொல்லச் சம்மதிக்கிறான். கோராவின் திட்டப்படி மூவரும் காரில் பயணிக்கும்போது, குடிபோதையில் கார் விபத்து ஏற்பட்டது போலச் சித்தரித்து நிக்கின் காரை மலை உச்சியிலிருந்து தள்ளி விடுகிறான் ஃபிராங்க்.
முதல்முறை தப்பித்தவனை 2-ம் முறை கொன்று விடுகிறார்கள். அதன்பின் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை விவரிப்பதே இப்படம். அப்போதைய தணிக்கை விதிமுறைகளால் ஜேம்ஸ் எம்.கெய்ன் எழுதிய இந்த நாவலைப் படமாக்க முடியாமல் ஹாலிவுட்டே தயங்கியபோது, எம்ஜிஎம் நிறுவனம் முன் வந்தது. திரைக்கதை ஆசிரியர்கள் ஹாரி ரஸ்கின் மற்றும் நிவன் புஷ் நாவலில் இருந்த மிருகத்தனமான பாலியல் ஈர்ப்பை, திரையில் ‘வசீகரமான ஆபத்தாக’ மாற்றி, ‘கண்ணியமான கிரிமினல் முலாம்’ பூசினார்கள்.
இயக்குநர் ‘டே கார்னெட்’ இப்படத்தைக் கையாண்ட விதம், இதற்கு ஒரு ‘கிளாசிக்’ அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது. லிப்ஸ்டிக் உருண்டு ஓடுவது, அதைத் தொடர்ந்து கேமரா, லானா டர்னரின் கால்களிலிருந்து முகம் வரை செல்லும் அந்த அறிமுகக் காட்சியிலேயே, கதாநாயகன் மட்டுமன்றி பார்வையாளர்களும் அவர் வசப்படப்போகிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறார்.
கோரா என்ற கதாபாத்திரத்தில் லானா டர்னர் அளித்த கவர்ச்சியும் அபாயகரமும் கலந்த நடிப்பு உலகப்புகழ் பெற்றது. “வெள்ளை நிறம் தூய்மையின் அடையாளம்” என்ற பொதுப்புத்தியைப் பயன்படுத்தி, ஒரு கொலையாளியைத் தேவதையைப் போலக் காட்டியது பாத்திரப் படைப்பில் மிகப்பெரிய முரண்பாட்டை உருவாக்கியது.
ஜான் கார்பீல்ட் ஓர் இருண்ட நாயகனாகத் தோன்றி, ஒரு சாதாரண மனிதன் பேராசையால் குற்றவாளியாக மாறும் மனநிலையை மிக இயல்பாக வெளிப்படுத்துகிறார்.
கோரா மீது கணவனைக் கொன்றது, காதலனைக் கொல்ல முயற்சித்தது என்று இரட்டை வழக்குப் போடும் கைல் சேக்கெட்டாக வரும் லியோன் ஏம்ஸ், ஃபிராங்கை நன்றாகக் குழப்பி காதலியை எதிரியாக்குகிறார்.
கோராவின் வழக்கறிஞர் ஆர்தர் கீட்ஸாக வரும் ஹியூம் குரோனின், சட்ட ஓட்டைகளைப் பயன்படுத்தி விடுதலை வாங்கித்தரும் கதாபாத்திரத்தை அற்புதமாகக் கையாண்டிருக்கிறார். சிரிப்பும் குடியுமாக வரும் அப்பாவி கணவன் நிக்காக, செசில் கெல்லவே ரசிக்க வைக்கிறார். கருப்பு-வெள்ளை ஒளிப்பதிவில் ஹாரி ஸ்ட்ராட்லிங் உருவாக்கிய நிழல்கள், குற்றவாளிகளைப் படம் பிடிக்கவில்லை; அவர்களின் குற்ற உணர்ச்சியைப் படம் பிடித்தன.
ஜார்ஜ் பாஸ்மேனின் இசை மற்றும் ஜார்ஜ் வைட்டின் எடிட்டிங் ஆகியவை இணைந்து, “விதி நெருங்கிக்கொண்டிருக்கிறது” என்ற பதற்றத்தைப் படம் முழுவதும் உணர்த்துகின்றன. குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும் என்ற அன்றைய தணிக்கை விதிமுறைகளுக்கேற்ப, ஃபிராங்கும் கோராவும் சேர்ந்து வாழ முற்படும்போது கார் விபத்தில் கோரா உயிரிழக்கிறாள்.
ஃபிராங்குக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மனித ஆசை, பேராசை, காதல் மற்றும் குற்றம் ஆகியவை மனிதனை எவ்வாறு அழிவின் பாதைக்கு இட்டுச் செல்கின்றன என்பதைக் காட்டும் ஆழமான மனோதத்துவப் படமாக இது திகழ்கிறது. இந்தப் படைப்பு, அடுத்து வந்த பல குற்றப்படங்களுக்குப் பாதையமைத்துக் கொடுத்தது. போஸ்ட்மேன் கதவைத் தட்டும் (?) மதியவேளைகளில் இப்படத்தைத் தாராளமாகப் பார்க்கலாம்!
(செவ்வாய்தோறும் படம் பார்க்கலாம்)