

“தனது தந்தையிடமிருந்து திருட்டுப் பணத்தின் ரகசியத்தை அறிந்த இரு குழந்தைகள், அந்தப் பணத்தை அபகரிக்கத் துடிக்கும் கொடூர கொலைகாரனிடமிருந்து தப்பிக்கப் போராடும் கதையே – த நைட் ஆஃப் த ஹன்டர். (THE NIGHT OF THE HUNTER -1955).
மதபோதகர் என்ற போர்வையில் உலவும் கொடூரமான தொடர் கொலைகாரன் ஹாரி பவெல். அமெரிக்காவின் வெஸ்ட் வெர்ஜினியா மாநிலத்தில் ஓடும், ஓஹையோ நதிக்கரையோரம் திருடப்பட்ட காரில் பயணிக்கும்போது கைது செய்யப்படுகிறான்.
மவுண்ட்ஸ்வில் சிறையில் 30 நாட்கள் தண்டனை அனுபவிக்கும் அவனுக்கு, அங்கே பென் ஹார்ப்பர் அறிமுகமாகிறான். வங்கிக் கொள்ளையின்போது இருவரைக் கொன்ற குற்றத்துக்காக மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் ஹார்ப்பர், திருடிய 10 ஆயிரம் டாலர் பணத்தை தன் குழந்தைகளான ஜான் மற்றும் பேர்ல் முன்னிலையில் ரகசியமாக மறைத்து வைத்திருக்கிறான்.
அந்த ரகசியத்தை தன் மனைவியிடம் கூடச் சொல்லக்கூடாது என்று குழந்தைகளிடம் சத்தியம் வாங்கியிருக்கிறான். சிறையில் பவெல் எவ்வளவோ தந்திரம் செய்தும், தூக்கில் தொங்கும்வரை அந்த ரகசியத்தை ஹார்ப்பர் வெளிப்படுத்தவில்லை.
சிறையிலிருந்து வெளியே வந்த பவெல், ஹார்ப்பர் வாழ்ந்த சிறிய ஊருக்குச் சென்று தன்னை புனித மனிதனாகக் காட்டிக்கொண்டு ஊர் மக்களின் நம்பிக்கையையும் அன்பையும் எளிதில் பெறுகிறான்.
ஹார்ப்பரின் பணத்தைக் கவர்வதற்காக அவனது மனைவி வில்லாவைக் கவர்ந்து திருமணம் செய்துகொள்கிறான். வில்லாவைத் திருமணம் செய்த பின்னரும் பவெல் அவளுடன் தாம்பத்திய உறவைத் தவிர்த்து, ஆன்மீகப் போதனைகளால் அவளை மன அழுத்தத்துக்கு உள்ளாக்குகிறான்.
பண ரகசியம் அவளுக்குத் தெரியவில்லை, குழந்தைகளுக்குத் தெரியும் என்று சந்தேகிக்கிறான்; ஒருகட்டத்தில் ஜான் அந்த உண்மையைத் தவறுதலாக வெளிப்படுத்தி விடுகிறான். பேர்லை மிரட்டிப் பணத்தின் ரகசியத்தை அறிய முயலும் பவெலின் கொடூர முகத்தை வில்லா உணர்ந்ததும், அவன் அவளைக் கொன்று உடலைக் காருடன் நதியில் மூழ்கடிக்கிறான்.
குடும்ப நண்பரான ‘அங்கிள் பெர்டி’, ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றபோது வில்லாவின் உடல் கார் இருக்கையில் அமர்ந்த நிலையில் இருப்பதைக் காண்கிறார். ஆனால், போலீஸிடம் சொன்னால் தன்னையே கொலைக்குற்றத்தில் சிக்க வைத்து விடுவார்கள் என்ற அச்சத்தில், எவரிடமும் சொல்லாமல் மவுனமாகிறார்.
இறுதியில் பணம் பேர்லின் துணிப் பொம்மைக்குள் மறைக்கப்பட்டிருப்பதை அறிகிறான் பவெல். அவனிடமிருந்து தப்பிக்க ஜான் மற்றும் பேர்ல் ‘அங்கிள் பெர்டி’ வீட்டுக்குச் செல்கிறார்கள். அவர் குடிபோதையில் மயங்கிக் கிடக்க, அங்குள்ள தங்கள் தந்தையின் படகின் மூலம் நதியில் தப்பிச் செல்கிறார்கள்.
பவெல் அவர்களை ஒரு சாத்தானைப் போலத் தேடி அலைகிறான். அவன் பிடியிலிருந்து சிறுவர்கள் எப்படித் தப்பினார்கள்? எங்குத் தஞ்சமடைந்தார்கள்? என்பதை கருணை உள்ளத்தோடு வெளிப்படுத்துவதே இத்திரைப்படம். 1955-ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தைப் புகழ்பெற்ற நடிகர் சார்லஸ் லாட்டன் இயக்கினார்; அவர் இயக்கிய ஒரே படம் இதுதான்.
வெளிப்படையாக இது ஒரு குற்றத் திகில் கதை போலத் தோன்றினாலும், ஆழத்தில் மனித மனத்தின் நன்மை–தீமை மோதலை வெளிப்படுத்தும் காட்சிக் கவிதையாகத் திகழ்கிறது. திரைக்கதையை எழுதிய ஜேம்ஸ் ஏஜி, டேவிஸ் கிரப்பின் நாவலைத் தழுவிக் கூர்மையான வசனங்களால் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளார்.
குறிப்பாக ஹாரி பவெல் தன் கைகளில் உள்ள “லவ்” மற்றும் “ஹேட்” பற்றிப் பேசும் வசனம் உலகப் புகழ் பெற்றது. ஒளிப்பதிவாளர் ஸ்டான்லி கோர்டெஸ், நிழல்களின் பயன்பாட்டால் ஒரு கனவு போன்ற பயங்கர உலகத்தை உருவாக்கினார். தண்ணீருக்கடியில் மூழ்கிய தாயின் தலைமுடி, பாசி போல அலை பாயும் காட்சி அவரது கலைநயத்தின் உச்சம்.
ராபர்ட் கோல்டன் படத்தொகுப்பில் ‘நிதானமான பதற்றம்’ (Slow-burn tension) உத்தியைப் பயன்படுத்தியிருக்கிறார். வில்லன் ஹாரி பவெல் குதிரையில் மெதுவாகத் துரத்தி வரும் காட்சிகளையும், குழந்தைகள் உயிருக்குப் பயந்து ஓடும் காட்சிகளையும் அவர் கோர்த்த விதம், ஒரு வேட்டைக்காரன் தன் இரையைத் துரத்துவது போன்ற உணர்வைத் தரும்.
இசையமைப்பாளர் வால்டர் ஷூமேன், இது ஒரு குற்றத் திகில் படம் என்றாலும் அதற்கு நேர்மாறாக மென்மையான இசையை வழங்கியிருப்பது வியக்கத்தக்க உத்தி. ஜான் ஹார்ப்பராக பில்லி சாப்பின் மற்றும் பேர்லாக சாலி ஜேன் புரூஸ் ஆகிய குழந்தைகள் கதையின் ஆன்மாவாக விளங்குகின்றனர்.
ஹாரி பவெலாக ராபர்ட் மிட்செம், சினிமா வரலாற்றின் சிறந்த வில்லன் நடிப்புகளில் ஒன்றை வழங்கியுள்ளார். சாதுவான பாதிரியாராகவும், அதே நேரம் பார்க்கவே அச்சத்தை ஏற்படுத்தும் சைக்கோவாகவும் அவர் வாழ்ந்திருப்பார். மேஜை நிறைய உணவுகளை வைத்துக்கொண்டு, பசியிலிருக்கும் குழந்தைக்கு உணவு கொடுக்காமல் அந்தப் பணத்தின் ரகசியத்தைக் கேட்டு மிரட்டும் காட்சி, கொடூரத்தின் உச்சம்.
ஷெல்லி வின்டர்ஸ், வில்லாவாக நயவஞ்சகமாக ஏமாற்றப்பட்ட ஒரு விதவையின் ஆழமான துயரத்தை மிக உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தியுள்ளார். மவுனப் படக் காலத்தின் ஈடு இணையற்ற சூப்பர் ஸ்டார் லில்லியன் கிஷ், இப்படத்தில் குழந்தைகளைக் காக்கும் பேரன்பு கொண்ட மூதாட்டியாக வாழ்ந்துள்ளார்.
மதத்தின் போர்வையில் ஒளிந்திருக்கும் தீமையை வெளிப்படுத்தி, மனித நேயமும் கருணையும் இறுதியில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையைச் சொல்லும் இந்தத் திரைப்படம் இன்று உலக சினிமாவின், காலத்தைக் கடந்த கிளாசிக்காக நிலைத்து நிற்கிறது.
ஒரு கொடூரமான குற்றக் கதையைக் கவிதை வடிவில் திரையில் செதுக்கியிருக்கும் இந்தத் திரைப்படைப்பு, உங்கள் வாழ்வின் ஓர் இரவுப் பொழுதைத் தாராளமாக ‘வேட்டையாட’ அனுமதிக்கலாம்.
(செவ்வாய்தோறும் படம் பார்ப்போம்)
- ramkumaraundipatty@gmail.com