

ஒரு வேட்டைக்காரன், மனிதர்களை வேட்டையாடும் கொடூர வேட்டைக்காரனால் வேட்டையாடப்படுவதே ‘த மோஸ்ட் டேஞ்சரஸ் கேம்’ (THE MOST DANGEROUS GAME - 1932) திரைப்படத்தின் ஒருவரிக் கதை.
பசிபிக் பெருங்கடலில் சொகுசு கப்பல் பயணிக்கும்போது சிக்னல் விளக்குகள் தவறாகக் காட்டுவதை உணர்கிறார் கேப்டன். புகழ்பெற்ற, பயண அனுபவம் பெற்ற வேட்டைக்காரரான பாப் ரெய்ன்ஸ்ஃபோர்டிடம் ஆலோசித்தும், சிக்னல் காட்டும் பாதையில் செல்ல உத்தரவிடுகிறார் கப்பல் உரிமையாளர்.
சற்று நேரத்தில் கப்பல் விபத்துக்குள்ளாகிறது. அதில் பாப் மட்டுமே பிழைக்கிறான். நீந்தியபடி அருகிலுள்ள பிராங்கா தீவை அடைகிறான். அங்கு போர்த்துக்கீசிய கோட்டையைப் புனரமைத்து ஆடம்பர இல்லமாக மாற்றி வாழும் ரஷ்ய பிரபு, கவுன்ட் ஜாரோஃப்பை சந்திக்கிறான்.
விபத்தில் தான் மட்டுமே பிழைத்ததாக பாப் கூற, அதற்கு முன் நடந்த விபத்துகளால் அங்கு ஏற்கெனவே அடைக்கலமாகி இருக்கும் ஈவ் ட்ரோப்ரிட்ஜ்மற்றும் அவளது குடிகாரத் தமையன் மார்ட்டினை, ஜாரோஃப் அறிமுகப்படுத்துகிறான்.
தனது வேட்டை பெருமைகளைப் பேசும் ஜாரோஃப், ஆப்பிரிக்க ‘கேப் எருமை’ முட்டியதால் ஏற்பட்ட நெற்றி வடுவைக் காட்டுகிறான். விலங்கு வேட்டைகள் சலித்ததால் மனிதர்களை வேட்டையாடும் தனது, புதிய வக்கிரமான விளையாட்டை மர்மமாகப் பேச, ஆபத்தறியாத மார்ட்டின் தானும் அதில் கலந்து கொள்வதாகக் கூறுகிறான்.
அன்று இரவு ஜாரோஃப் பியானோ வாசிக்க, அதன் பின்னணியில் ஈவ், தன்னுடன் வந்த இருவர்கள் ஜாரோஃப்பின் ரகசிய அறைக்குச் சென்று காணாமல் போனதை பாபிடம் பகிர்ந்து கொள்கிறாள். நள்ளிரவில் தன் சகோதரன் மார்ட்டினையும் காணவில்லை என பாபின் அறைக் கதவைத் தட்டுகிறாள் ஈவ்.
இருவரும் கோட்டையின் அடியிலுள்ள டிரோஃபி ரூமுக்குள் நுழைகிறார்கள். அங்கு சுவர்களில் பதப்படுத்தப்பட்ட மனிதத் தலைகள், கண்ணாடிக் குடுவையில் மிதக்கும் தலையைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்கள்.
அதே நேரம் மார்ட்டினின் சடலத்தை ஜாரோஃப்பின் ஆட்கள் தூக்கி வர, ஈவ் கதறுகிறாள். ஜாரோஃப்பைத் தாக்க முயலும் பாப் கட்டப்பட, ஈவ் தனியே இழுத்துச் செல்லப்படுகிறாள். அப்போது தனது வேட்டையில்தான் மார்ட்டின் இறந்தான் என்ற கொடூர உண்மையை உடைக்கிறான் ஜாரோஃப்.
சிக்னல் விளக்குகளைத் தானே மாற்றி அமைத்துக் கப்பல்களை விபத்துக்கு உள்ளாக்குவதாகவும், தப்பி வரும் மனிதர்களிடம் கத்தியைக் கொடுத்துத் தீவுக்குள் தப்பிக்க அவகாசம் கொடுத்து வேட்டையாடுவதாகவும் தன் ஆட்டத்தை விவரிக்கிறான்.
“நீயும் நானும் வேட்டைக்காரர்கள்” என்று அடுத்த ஆட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பாபிடம் கூற, “நான் வேட்டைக்காரன், கொலையாளி அல்ல!” என பாப் மறுக்கிறான். “அப்படியானால் அடுத்த கப்பலுக்குக் காத்திருக்கத் தேவையில்லை. இப்போதே ஆட்டம் ஆரம்பம்” என்று கூறி, பாபையும் ஈவையும் அதிகாலை 4 மணிக்குக் கத்தியுடன் காட்டுக்குள் அனுப்புகிறான். இருவரும் தப்பிக்க வழி தேடிப் போராடுகிறார்கள்.
ஜாரோஃப்பை வீழ்த்த, ‘மலேயன் டெட்பால்’ பொறியை பாப் தந்திரமாக அமைக்கிறான். ஆனால், அதிலிருந்து புத்திசாலித்தனமாகத் தப்பிக்கும் ஜாரோஃப், அவர்களைக் கொல்ல வேட்டைநாய்களை ஏவி விடுகிறான்.
ஒருபுறம் அலை மோதும் கடல், மறுபுறம் மூடுபனியும் முதலைகளும் நிறைந்த ஆபத்தான ‘ஃபாக் ஹாலோ’ சதுப்பு நிலக்காடு என எங்கும் தப்ப வழியின்றி பாபும் ஈவும் தவிக்கிறார்கள். மனிதர்களை இரையாகக் கருதும் கொடூர வேட்டைக்காரனின் பிடியில் இருந்து அவர்கள் தப்பினார்களா? என்பதை பதற்றம் குறையாமல் சொல்வதே இத்திரைப்படத்தின் சிறப்பு.
ரிச்சர்ட் கானலின் புகழ்பெற்ற சிறுகதையைத் தழுவி, எர்னஸ்ட் பி. ஸ்கோட்சாக் மற்றும் இர்விங் பிச்செல் இயக்கத்தில் வெளியான அமெரிக்க திகில் திரைப்படம் இது. ஆர்.கே.ஓ ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ‘கிங் காங்’ (1933) திரைப்படத்துக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான தீவு மற்றும் அடர்ந்த காடு உள்ளிட்ட படப்பிடிப்புத் தளங்களில்தான் இத்திரைப்படமும் படமாக்கப்பட்டது.
பகலில் ‘கிங் காங்’ படப்பிடிப்பும், அதே தளத்தில் இரவில் இந்தப் படத்தின் மனித வேட்டைக் காட்சிகளும் படமாக்கப்பட்டன என்பது சினிமா வரலாற்றின் சுவையான பக்கம். இப்படத்துக்குத் திரைக்கதை எழுதிய ஜேம்ஸ் ஆஷ்மோர் கிரீல்மேன்தான், ‘கிங் காங்’ படத்துக்கு முதன்மைத் திரைக்கதை ஆசிரியர்.
ஒளிப்பதிவு - ஹென்றி ஜெரார்ட்: படத்தின் மிகப்பெரிய பலமே இதன் அசாத்தியமான கருப்பு-வெள்ளை ஒளிப்பதிவுதான். ஸ்டூடியோ செட்டுக்குள் எடுக்கப்பட்டாலும், அடர்ந்த காடு, மூடுபனி சூழ்ந்த சதுப்பு நிலம், கோட்டையின் உட்புறக் காட்சிகள் ஆகியவற்றில் ஜெர்மன் ‘எக்ஸ்பிரஷனிச’ பாணியிலான நிழல்களையும், மரங்களுக்கு நடுவே புகுந்து வரும் நிலவொளியையும் பயன்படுத்தி திகிலூட்டும் நரகத்தைக் கண்முன்னே நிறுத்தியுள்ளார்.
கலை இயக்குநர் - கரோல் கிளார்க்: பழமையான போர்த்துகீசியக் கோட்டையையும், பதப்படுத்தப்பட்ட மனிதத் தலைகள் நிறைந்த ஜாரோஃபின் ரகசிய அறையையும் தத்ரூபமாக வடிவமைத்திருக்கிறார்.
படத் தொகுப்பாளர் - ஆர்ச்சி மார்ஷெக்: வெறும் 63 நிமிடமே ஓடும் இப்படத்தில் தேவையற்ற ஒரு காட்சி கூட இல்லை. காட்டில் நடக்கும் துரத்தல் காட்சிகளின் வேகத்தையும், அதீத பதற்றத்தையும் தனது கச்சிதமான கத்தரிப்பின் மூலம் சரியாக கடத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர் - மேக்ஸ் ஸ்டெய்னர்: ஹாலிவுட்டின் ‘திரைப்பட இசையின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர். இசை மூலம் படம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார். ஜாரோஃப், பியானோ வாசிக்கும் இசையையே பின்னணி இசையாகப் பயன்படுத்திய உத்தி வியக்க வைத்தது.
ஜோயல் மெக்ரியா (பாப் ரெய்ன்ஸ்ஃபோர்ட்): கம்பீரமான வேட்டைக்காரனாகத் தொடங்கி, தானே இரையாக மாறி உயிர் பிழைக்கப் போராடும் மனிதனின் தவிப்பை தனது இயல்பான உடல்மொழியால் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஃபே வ்ரே (ஈவ் ட்ரோப்ரிட்ஜ்): பின்னாளில் ‘கிங்காங்’ மூலம் ‘ஸ்க்ரீம் குயின்’ என்று புகழ்பெற்றவர். பயமும் தைரியமும் கலந்த பெண்ணாக சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார்.
லெஸ்லி பேங்க்ஸ் (கவுண்ட் ஜாரோஃப்): படத்தின் மிகப்பெரிய பலம் இவரது நடிப்பே. நாகரிகமான பிரபுவின் தோற்றத்தில், இரக்கமற்ற மன பிறழ்வு கொண்ட கொலைகாரனாக, மறக்க முடியாத மிரட்டலை உருவாக்கியுள்ளார்.
இன்றைய ‘த ஹங்கர் கேம்ஸ்’, ‘பிரிட்டேட்டர்’, ‘ஸ்குவிட்கேம்’ போன்ற உயிர்-சாவு வேட்டை கதைகளின் முன்னோடியாகக் கருதப்படும் திரைப்படம் இதுவே. “மனிதனைவிட ஆபத்தான விலங்கு எதுவுமில்லை” என்ற கருத்தை 1932-லேயே விறுவிறுப்பாகச் சொன்ன இந்த கிளாசிக் த்ரில்லரை தவறாமல் ரசிக்கலாம்.
(செவ்வாய் தோறும் படம் பார்ப்போம்)
- ramkumaraundipatty@gmail.com