

அழுக்கு வீதிகளில் உருவான ஒரு கேங்ஸ்டர், அதே வீதிகளில் வளரும் சிறுவர்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றத் தனது வீரப் புகழை தியாகம் செய்யும் படம், ஏஞ்சல்ஸ் வித் டர்ட்டி ஃபேஸஸ் (ANGELS WITH DIRTY FACES - 1938 ).
1920-களில் நியூயார்க் குடிசை பகுதியில் வசிக்கும் சிறுவர்கள் ராக்கியும் ஜெர்ரியும் ரயிலில் மைப்பேனாக்களைத் திருட முயல்கின்றனர். அப்போது ஜெர்ரி தப்பிக்க, ராக்கி மட்டும் போலீஸிடம் சிக்கி சீர்திருத்தப் பள்ளிக்குச் செல்கிறான்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு தாதாவாகத் திரும்பும் ராக்கி, பாதிரியாராகிவிட்ட தன் பால்ய நண்பன் ஜெர்ரியைச் சந்திக்கிறான். சிறுவயதில் தன்னிடம் வம்பு செய்த ராக்கியின் தலையில் செல்லமாகத் தட்டி வரவேற்கிறாள் லாரி.
ஜெர்ரி நடத்தும் உடற்பயிற்சிக் கூடத்துக்கு வராமல் தெருவில் சுற்றும் சிறுவர்கள் ராக்கியிடம் திருட முயல்கிறார்கள். அவனுடைய உண்மையான அடையாளத்தை அறிந்த சிறுவர்கள் அவனைத் தங்கள் ‘ஹீரோவாக’ ஏற்கின்றனர். ராக்கியும் தன் முரட்டுத்தனமான பாணியிலேயே அவர்களுக்கு விளையாட்டைக் கற்றுக்கொடுக்கிறான்.
தன்னிடம் பண மோசடி செய்ய நினைத்துத் தன்னைக் கொல்லத் திட்டமிட்ட வழக்கறிஞர் ஃபிரேசியரையும், அவனது கூட்டாளி தாதா மேக்கையும் சாமர்த்தியமாக மிரட்டித் தன் ஒரு லட்சம் டாலரை ராக்கி மீட்கிறான். அந்தப் பணத்தைச் சிறுவர்களிடம் கொடுத்து அவர்களைச் சூதாட்டம், மது எனத் தவறான பாதைக்குத் திருப்புகிறான்.
மேலும், ஜெர்ரியின் புதிய ஆலயத்துக்கு ராக்கி தரும் பத்தாயிரம் டாலர் நன்கொடையை, அது ‘கறைபடிந்த பணம்’ எனக் கூறி ஜெர்ரி ஏற்க மறுக்கிறார். ராக்கியின் செயல்களால் ஈர்க்கப்பட்டு சிறுவர்கள் ரவுடிகளாக மாறுவதைக் கண்டு ஜெர்ரி கொதித்தெழுகிறார். லாரி, ஜெர்ரியிடம், “ராக்கி இப்படி ஆனதற்கு அவன் சிறைக்குச் சென்று வந்ததே காரணம்” என்று கூறுகிறாள்.
ஜெர்ரி, ஊடகங்கள் மூலம் குற்ற உலகிற்கு எதிராக அறப்போர் தொடங்குகிறார். ஆத்திரமடைந்த தாதாக்கள் அவரைக் கொல்லத் திட்டமிட, நண்பனைக் காக்க ராக்கி அவர்களைச் சுட்டுக் கொல்கிறான். இதைத் தொடர்ந்து நடக்கும் பரபரப்பான போலீஸ் முற்றுகையில், தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்த வரும் ஜெர்ரியையே பிணைக் கைதியாகப் பிடித்துத் தப்பிக்க முயலும் ராக்கி இறுதியில் போலீஸிடம் சிக்குகிறான்.
ராக்கிக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. சிறுவர்கள் குற்றவாளிகளாக மாறுவதைத் தடுக்க, “நீ ஒரு கோழையைப் போலப் பயந்து சாக வேண்டும்” என ஜெர்ரி அவனிடம் கடினமான வேண்டு கோளை வைக்கிறார்.
முதலில் மறுக்கும் ராக்கி, மின்சார நாற்காலிக்குச் செல்லும் இறுதி நொடியில் “நான் வாழ வேண்டும்!” எனக் கதறி அழுது தன் ‘ஹீரோ’ பிம்பத்தை உடைக்கிறான். இதைக் கேட்டு அதிர்ச்சியடையும் சிறுவர்கள் ஜெர்ரியுடன் பிரார்த்தனைக்குச் செல்கின்றனர்.
ஒரு குற்றவாளியின் வாழ்க்கையை வெறும் துப்பாக்கிச் சத்தங்களாலும், ரத்தத்தாலும் சொல்லாமல், மனித மனதின் ஆழமான முரண்பாடுகளை வைத்துச் சொன்ன கிளாசிக் திரைப்படம்தான் இது.
பின்னாளில் ‘காஸாபிளாங்கா’ போன்ற காவியங்களை இயக்கிய மைக்கேல் கர்டிஸ், சிறுவர்கள் எப்படி ஒரு கிரிமினலை ஹீரோவாகப் பார்க்கிறார்கள் என்ற உளவியல் சிக்கலை மையமாகக் கொண்ட ரோலண்ட் பிரவுனின் கதையை, ஜான் வெக்ஸ்லி மற்றும் வாரன் டஃப்பின் விறுவிறுப்பான திரைக்கதையில் மிக நேர்த்தியாகத் திரையில் செதுக்கியிருக்கிறார்.
சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் (ஜேம்ஸ் காக்னி), சிறந்த கதை (ரோலண்ட் பிரவுன்) என மூன்று அகாடமி விருதுகளுக்கு இப்படம் பரிந்துரைக்கப்பட்டது. சமூக நீதிக் கருத்துகளைத் தைரியமாகத் திரையில் சொன்ன வார்னர் பிரதர்ஸின் பாரம்பரியத்துக்கு இந்தப் படம் சிறந்த எடுத்துக்காட்டு.
ஒளிப்பதிவாளர் சால் பலிட்டோ, ராக்கி மின்சார நாற்காலிக்குச் செல்லும்போது அவனது முகத்தைக் காட்டாமல் சுவரில் விழும் நிழலை மட்டுமே படமாக்கிய விதம் உலகத் தரமான நுணுக்கம்.
படத்தொகுப்பாளர் ஓவன் மார்க்ஸ், ராக்கியின் குற்றங்களையும் ஜெர்ரியின் பிரச்சாரங்களையும் இணையான காட்சிகளாக வெட்டி கதையின் வேகத்தை அருமையாகக் கூட்டியிருக்கிறார்.
ஹாலிவுட் பின்னணி இசையின் தந்தை மேக்ஸ் ஸ்டைனரின் இசை, கிளைமாக்ஸில் இதயத்தை திக்திக்கென துடிக்க வைக்கிறது. ராக்கி சல்லிவனாக ஜேம்ஸ் காக்னியின் தோள்பட்டையைக் குலுக்கும் மேனரிசம் முதல் கிளைமாக்ஸில் கதறுவது வரை, உண்மையில் பயந்தாரா, நண்பனுக்காக நடித்தாரா என்று பார்வையாளரை குழப்பத்தில் ஆழ்த்தும் அந்த ஒற்றைக் காட்சியே அவரது நடிப்புத் திறனுக்குச் சான்று.
பாட் ஓ’பிரையன் (பாதிரியார் ஜெர்ரி): அமைதியான அதே நேரம் உறுதியான நடிப்பு. தனது பால்ய நண்பனையே அழிக்க நினைக்கும்போது அவர் முகத்தில் தெரியும் குற்ற உணர்ச்சியும், சமூகப் பொறுப்பும் அற்புதம்.
ஹம்ப்ரி போகார்ட் (வழக்கறிஞர் ஃபிரேசியர்): ஒரு கோழையான, பண ஆசை பிடித்த நயவஞ்சக வழக்கறிஞராகத் தனது வில்லத்தனத்தைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்.
ஆன் ஷெரிடன் (லாரி மார்ட்டின்): குற்றவாளியுடன் பழகும் பெண்ணின் தவிப்பை, அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். ‘டெட் எண்ட் கிட்ஸ்’ எனப்படும் அந்தத் தெருச் சிறுவர்களின் பங்கும் அளப்பரியது.
தாதாவை ‘ஹீரோவாக’ கொண்டாடும் துடிப்பையும், கிளைமாக்ஸில் அவன் கோழையாக இறந்துவிட்டான் என்ற செய்தியைக் கேட்டு ஏமாற்றத்துடன் உடைந்து போகும் தவிப்பையும் யதார்த்தமாகப் பிரதிபலித்திருக்கிறார்கள்.
அழுக்கு முகங்களைக் கழுவித் துடைத்து, அதன் உள்ளே ஒளிந்திருக்கும் தேவதைகளை நமக்குக் காண்பித்த இந்தத் திரைக் காவியத்துக்காக, ஓர் அமைதியான மாலைப் பொழுதை மகிழ்ச்சியுடன் அர்ப்பணிக்கலாம்.
(செவ்வாய்தோறும் படம் பார்ப்போம்)
- ramkumaraundipatty@gmail.com