

கரோனா நெருக்கடி காரணமாக ஏற்பட்ட நஷ்டத்தைச் சமாளிக்க டிஸ்னி பூங்கா, அமெரிக்காவில் தனது பணியாளர்கள் 28,000 பேரை வேலையை விட்டு நீக்கவுள்ளது.
டிஸ்னிலேண்ட் மற்றும் வால்ட் டிஸ்னி வேர்ல்டில் பணிபுரியும் இந்தப் பணியாளர்களில், மூன்றில் இரண்டு பங்கு பணியாளர்கள் பகுதி நேரமாக அங்கு பணிபுரிபவர்கள். இதுகுறித்துப் பணியாளர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கும் டிஸ்னி பூங்காவின் தலைவர் ஜோஷ் டி அமரோ, இது மட்டுமே தற்போதைய சூழலில் சாத்தியப்படும் ஒரே வழி என்று குறிப்பிட்டுள்ளார்.
கலிபோர்னியாவில் டிஸ்னிலேண்ட் மூடப்பட்டுள்ளது. இதைத் திறப்பதற்கான அனுமதி கிடைக்கவில்லை. கலிபோர்னியா அரசு நிர்வாகம் டிஸ்னிலேண்டை மீண்டும் திறக்க ஏதுவாக, கட்டுப்பாடுகளை நீக்க விரும்பவில்லை என்றும் அமரோ தெரிவித்துள்ளார்.
மார்ச் இரண்டாவது வாரத்திலிருந்து டிஸ்னிலேண்ட் மூடப்பட்டுள்ளது. ஆர்லாண்டோவில் இருக்கும் வால்ட் டிஸ்னி வேர்ல்டும் மார்ச் மாதத்திலிருந்து மூடப்பட்டாலும் ஜூலை மத்தியில், பாதுகாப்பு நடவடிக்கைகளுடனும், கட்டுப்படுத்தப்பட்ட பார்வையாளர்கள் அனுமதியுடனும் திறக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட தொழிலாளர் சங்கங்களைச் சேராத பணியாளர்களை வரும் நாட்களில் சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் டி அமரோ தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.