Published : 27 Apr 2024 06:36 PM
Last Updated : 27 Apr 2024 06:36 PM

“அது ஓர் இருண்ட காலம்” - ஹாலிவுட்டின் ஆரம்ப கால அனுபவம் பகிர்ந்த பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

அமெரிக்கா: “ஹாலிவுட்டில் என்னுடைய ஆரம்ப நாட்களை இருண்ட காலம் என்பேன். அங்கு யாரையுமே எனக்குத் தெரியாது. தனியாக இருந்தேன். அந்த நியூயார்க் நகரம் என்னை அச்சுறுத்தியது” என நடிகை பிரியங்கா சோப்ரா அனுபவம் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பாக பாட்காஸ்ட் ஒன்றில் பேசியுள்ள அவர், “எல்லாவற்றையும் மீண்டும் தொடங்குவது போல் இருந்தது. ஆரம்பத்திலிருந்து அனைத்தையும் தொடங்கினேன். இந்தியாவில் பல முன்னணி பத்திரிகைகளில் என்னுடைய புகைப்படம் கவர் பக்கத்தில் வெளியாகி கவனம் பெற்றிருந்தேன். ஆனால், அமெரிக்காவில் என்னை சந்திப்பதற்கு கூட நேரம் ஒதுக்கமாட்டார்கள். அப்படியான நிறைய விஷயங்கள் நடந்தது.

அதனால் நான் முடங்கிவிட்டேன் என்றோ அல்லது என்னுடைய அனைத்து கதவுகளும் அடைப்பட்டு விட்டது என்றோ சொல்லவில்லை. மிகவும் அமைதியாக என்னுடைய பணிகளை செய்து வந்தேன். நான் முன்னணி நடிகை என்றோ, வேறு எதையுமோ பெருமை பேசிக்கொண்டிருக்காமல் என்னுடைய வேலையில் கவனம் செலுத்தியதால் தான் நான் இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறேன்.

ஹாலிவுட்டில் என்னுடைய ஆரம்ப காலக்கட்டத்தை ‘இருண்ட நாட்கள்’ என்பேன். அந்த திரையுலகமே எனக்கு புதிதாக இருந்தது. அங்கிருந்த யாரையும் எனக்குத் தெரியாது. எதுவுமே தெரியாமல் மிகவும் தனியாக இருந்தேன். பயந்தேன். நியூயார்க்கில் இருந்தேன். அந்த நகரம் என்னை அச்சுறுத்தியது. எப்படியிருந்தால் அது என் வாழ்வின் இருண்ட காலம்” என்றார்.

அந்நாட்களில் இருந்து மீண்டு வந்தது குறித்து கூறுகையில், “நான் லட்சியங்களையும், கனவுகளையும் எப்போதும் கொண்டிருப்பேன். அதை நோக்கி வேகமாக ஓடுவேன். எல்லா பிரச்சினைகளும் தீர வேண்டும் என விரும்பினேன். எப்போதும் தீர்வை விரும்புவது என் குணம். ஆனால், சில நேரங்களில் உங்களுக்கு தீர்வு கிடைக்காது. அப்போது நீங்கள் அதை அப்படியே விட்டுவிட வேண்டும். அலையை எதிர்த்து போராடுவதற்கு பதிலாக அதில் சவாரி செய்ய வேண்டும் என்ற பாடம் தான் எனக்கு உணர்த்தியது” என்றார் பிரியங்கா சோப்ரா.

பிரியங்கா சோப்ரா: 2000-ம் ஆண்டு ‘உலக அழகி’ பட்டத்தை வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் பிரியங்கா சோப்ரா. அதன் பின் கடந்த 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழன்’ படம் மூலம் திரையுலகில் நடிகையான அறிமுகமானார். அதன் பிறகு இந்திப் படங்களில் நடித்து வந்த அவர், நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

பாலிவுட்டில் புறக்கணிக்கப்படுவதாக கூறி, அதிலிருந்து வெளியேறி 2016-ம் ஆண்டு முதல் ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் வெளியான அவரது ‘சிடாடல்’ (Citadel) இணையத் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து அவர் நடிப்பில் ‘ஹெட் ஆஃப் ஸ்டேட்’ ஹாலிவுட் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x