

இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ள ‘ஹோம்பவுண்ட்’ படம் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. நீரஜ்கேவான் இயக்கத்தில், ஜான்வி கபூர், இஷான் கட்டார், விஷால் ஜெத்வா உள்பட பலர் நடித்துள்ள படம், ‘ஹோம்பவுண்ட்’.
கரண் ஜோஹரின் தர்மா புரொடக் ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் பஷாரத் பீர் என்பவர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் எழுதிய கட்டுரையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில், ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ள இப்படம்,அடுத்த சுற்று வாக்களிப்புக்கு முன்னேறியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட படங்களில் 15 திரைப்படங்கள் அடுத்த சுற்று வாக்கெடுப்புக்கு முன்னேறியுள்ளதாக ஆஸ்கர் அகாடமி அறிவித்துள்ளது. அர்ஜென்டினா, பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி, ஈராக், ஜப்பான், ஜோர்டான், நோர்வே, பாலஸ்தீனம், தென் கொரியா, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து, தைவான், துனிசியா ஆகிய நாட்டுத் திரைப்படங்களுடன் இந்தியாவின் ‘ஹோம்பவுண்ட்’ திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. இறுதி பரிந்துரை பட்டியல் ஜன.22-ல் வெளியாகிறது.