

நடிகை மஞ்சரி
இந்தி நடிகை மஞ்சரி பட்னிஸ், தமிழில் ‘முத்திரை’ என்ற படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ள இவர், மும்பையில் வசித்து வருகிறார். இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழுதபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தங்களது அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மைக்கி என்ற நாய் கொடூரமாகக் கொல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். 2020ம் ஆண்டு முதல் அந்த குடியிருப்பில் அந்த நாய் வளர்ந்து வந்தது. மஞ்சரி மற்றும் அங்குள்ள விலங்கு ஆர்வலர்கள் அதைக் குளிப்பாட்டி, அழகுபடுத்தி தங்களின் சொந்த வளர்ப்புப் பிராணி போலக் கவனித்து வந்தனர்.
கடந்த சில நாட்களாக மைக்கியைக் காணவில்லை. தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அது உறங்கிக் கொண்டிருந்தபோது இரும்புக் கம்பிகளால் தாக்கி, பாதி உயிர் இருந்த நிலையில் சாக்கு மூட்டையில் கட்டி, பாழடைந்த பகுதியில் வீசியிருப்பது தெரியவந்துள்ளது. இந்தச் செயல் தன்னை உலுக்கியுள்ளதாக மஞ்சரி கூறியுள்ளார்.
"மிருகங்களை இவ்வளவு கொடூரமாகத் துன்புறுத்த மக்கள் பயப்பட வேண்டும். இந்தியாவில் விலங்கு வதைக்கு எதிரான சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும். மைக்கிக்கான நீதிக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்" என்று ஆவேசமாக அவர் தெரிவித்துள்ளார். பூமி பட்னேகர், வேதிகா உள்ளிட்ட பல நடிகைகளும் இந்த சம்பவத்துக்குத் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.