

சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படம், ‘கேரளா ஸ்டோரி’. கேரளாவில் இளம்பெண்களை மதமாற்றம் செய்து அவர்களைத் தீவிரவாதிகளின் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்துவதாக அந்தப் படத்தில் காட்சிகள் இடம்பெற்றன. அந்தப் படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சில மாநிலங்களில் தடை செய்யப்பட்டது.
இந்நிலையில் அந்தப் படத்தின் அடுத்த பாகமாக ‘பியாண்ட் த கேரளா ஸ்டோரி’ என்ற படம் உருவாகி வருகிறது. இதை ‘கேரளா ஸ்டோரி’ படத்தைத் தயாரித்த விபுல் அம்ருத்லால் ஷா தயாரிக்கிறார். இப்படக்குழு வீடியோஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “அது வெறும் கதைதான்என்று சொன்னார்கள். அதை நம்பகத்தன்மையற்றதாக மாற்ற முயன்றார்கள்.
ஆனால் உண்மையை நிறுத்த முடியாது. ஏனென்றால் சில கதைகள் ஒருபோதும் முடிவடைவதில்லை. இந்த முறை, இக்கதை உங்களை இன்னும் அதிகமாகக் காயப்படுத்தும்’’ என்று கூறியுள்ளனர்.
இப்படத்தை காமாக்யா நாராயண் சிங் இயக்குகிறார். நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரத்தை படக்குழு வெளியிடவில்லை. பிப்.27-ம்தேதி இப்படம் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு கேரளாவில் நடந்து வருகிறது.