

தனது பெயர் மற்றும் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்கக் கோரி நடிகை ஷில்பா ஷெட்டி, வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் பிரபலங்களின் புகைப்படங்கள், மார்பிங் புகைப்படங்கள், போலியான வீடியோ ஆகியவற்றை வணிகத்துக்காகப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. அனுமதியின்றி இதுபோன்று பயன்படுத்துவது தங்களுடைய தனியுரிமையை மீறும் செயல் என்றும் இதுபோன்ற செயல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று சினிமா பிரபலங்கள் வழக்குத் தொடர்ந்து வருகின்றனர்.
ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன், கரண் ஜோஹர், நாகார்ஜுனா, சிரஞ்சீவி, இளையராஜா, ஹிருத்திக் ரோஷன், அக் ஷய்குமார் உள்பட பலர் இதுபோன்ற வழக்கைத் தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டியும் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில் பல்வேறு பொருட்களை விளம்பரப்படுத்துவதற்காக அவருடைய புகைப்படங்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்திய பல இணையதளங்களின் பெயர்களையும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இதுபற்றி ஷில்பா ஷெட்டியின் வழக்கறிஞர் சனா ரயீஸ் கான் கூறும்போது,”எந்த நிறுவனமும் அவரது பெயரையோ, புகைப் படங்களையோ அனுமதி இல்லாமல் பயன்படுத்த முடியாது. அவரது அடையாளத்தை, வணிக ரீதியாகச் சுரண்டுவது அவருடைய கண்ணியம் மற்றும் நற்பெயர் மீதான நேரடித் தாக்குதல். எந்த தனிநபருக்கும் அல்லது தளத்துக்கும் சட்டவிரோத வணிக ஆதாயத்துக்காக அவருடைய நற்பெயரைப் பயன்படுத்த உரிமை இல்லை. இதுபோன்ற தவறான பயன்பாட்டை நிறுத்த வழக்குத் தொடர்ந்துள்ளோம்” என்றார்.