சினிமாவாகும் சுகேஷ் - ஜாக்குலின் காதல் கதை

சினிமாவாகும் சுகேஷ் - ஜாக்குலின் காதல் கதை
Updated on
1 min read

பெங்களூரைச் சேர்ந்தவர், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர். செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களுடன் நட்பு இருப்பதாகக் கூறி தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட பலரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக இவர் மீது புகார்கள் உள்ளன.

தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு இருந்தபடியே, தொழிலதிபர் ஒருவர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்து, சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும் தெரியவந்தது. மேலும் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேஹி உள்ளிட்ட நடிகைகளுக்கு கோடிக்கணக்கில் பணமும், பரிசும் இவர் வழங்கியது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. சுகேஷ், ஜாக்குலினை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகர் கதை சினிமாவாக இருக்கிறது. இதை ஆனந்த் குமார் இயக்குகிறார். சுகேஷ் குறித்த தகவல்களைப் பெற திகார் சிறை அதிகாரி தீபக் சர்மாவை, சந்தித்துள்ளார்.

அவர் கூறும்போது, “இப்போது ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறோம். திரைப்படமாக எடுக்கிறோமா, வெப் தொடரா என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை” என்றார்.

இவர் ஏற்கெனவே, டெல்லி ஹைட்ஸ், ஜில்லா காஸியாபாத், தேசி கட்டே உட்பட சில படங்களை இயக்கியுள்ளார். சுகேஷ் - ஜாக்குலின் காதல் விவகாரங்களும் இதில் இடம் பெறும் என கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in