5 நாட்களில் ரூ.543 கோடி வசூல் - பாலிவுட்டில் புது வரலாறு படைக்கும் ‘பதான்’

5 நாட்களில் ரூ.543 கோடி வசூல் - பாலிவுட்டில் புது வரலாறு படைக்கும் ‘பதான்’
Updated on
1 min read

5 நாட்களில் ரூ.543 கோடியை வசூலித்து பாலிவுட் சினிமாவில் வார இறுதியில் நாட்களில் அதிகபட்ச வசூலை குவித்த படமாக ‘பதான்’ சாதனை படைத்துள்ளது.

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரஹாம் நடித்து கடந்த 25-ம் தேதி வெளியான இந்திப் படம், ‘பதான்’. சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். ‘பேஷரம் ரங்’ பாடல் காட்சியில் தீபிகா அணிந்திருந்த காவி பிகினி, சர்ச்சையை ஏற்படுத்தியது.

படத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த எதிர்ப்புகளை மீறி ‘பதான்’ வசூலில் சாதனைப் படைத்து வருகிறது. 4 வருடத்துக்குப் பிறகு ஷாருக்கான் நடித்த படம் என்பதால், ரசிகர்கள் தியேட்டரில் குவிந்து வருகின்றனர்.

முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.106 கோடி வசூல் அள்ளிய இந்தப்படம் அடுத்தடுத்த நாட்களிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 4 நாட்களில் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் குவித்திருந்தது. தற்போது 5 நாட்கள் முடிவில் படம் ரூ.543 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்மூலம் அதிவேகமாக ரூ.500 கோடி வசூலித்த இந்திப் படம் என்ற சாதனையுடன், வார இறுதி நாட்களில் அதிகபட்சவசூலை குவித்த முதல் படம் என்ற பெருமையையும் பதான் பெற்றிருக்கிறது. படம் இந்தியாவில் மட்டும் ரூ.335 கோடியை வசூலித்திருப்பதாக யாஷ்ராஜ் ஃபிலீம்ஸ் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in