

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் உண்மை கதை அல்ல என நிரூபித்தால் சினிமா இயக்குவதை முற்றிலுமாக நிறுத்திக் கொள்வதாக அந்த படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார். இதனை வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார் அவர்.
கோவா சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளன்று 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் பிரசார திரைப்படம் என சொல்லி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார் இஸ்ரேலை சேர்ந்த இயக்குனர் நடாவ் லேபிட். அது பெரும் விவாதத்தை எழுப்பி இருந்தது. அவரது கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி இருந்தது.
கடந்த 1990-களில் காஷ்மீர் பகுதியில் நடைபெற்று உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். மார்ச் மாதம் வெளியான இந்த படத்திற்கு இந்தியாவின் சில மாநிலங்களில் வரி விலக்கும் கொடுக்கப்பட்டு இருந்தது. வசூல் ரீதியாகவும் கல்லா கட்டியிருந்தது இந்தத் திரைப்படம்.
லேபிட் கருத்துக்கு பதில் கொடுத்துள்ளார் விவேக் அக்னிஹோத்ரி, “இது எனக்கு புதிது அல்ல. ஏனென்றால் நாட்டை பிளவுப்படுத்த விரும்பும் சக்திகள் இப்படி சொல்வது வழக்கம். எனக்கு அதிர்ச்சி என்னவென்றால் இந்த கருத்து சொல்லப்பட்டுள்ள இடம்தான். இந்திய அரசு ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் இது நடந்துள்ளது. காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரிக்க விரும்புபவர்கள் சொல்லியுள்ள கருத்து இது. இந்தியாவில் வாழ்ந்து வரும் சிலரும் எதிராக கருத்து சொல்லி உள்ளனர். இவர்கள் எல்லாம் யார்?
இது பிரசார படம் என சொல்பவர்களுக்கு ஒன்றே ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் வரும் ஒரு சிங்கிள் ஷாட், வசனம் மற்றும் நிகழ்வுகள் என எதுவும் நிஜம் அல்ல என யாரேனும் (அந்த இஸ்ரேல் இயக்குனர் உட்பட) நிரூபித்தால் நான் சினிமா இயக்குவதை நிறுத்திக் கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த படத்தை இயக்குவதற்கு முன்னர் சுமார் 700 பேரை நேர்காணல் செய்ததாக அவர் சொல்லியுள்ளார்.
என்ன பேசினார் லேபிட்?
கோவா திரைப்பட விழா நேற்று (நவ.28) நிறைவுபெற்ற நிலையில், நிறைவு விழாவில் இஸ்ரேலிய எழுத்தாளரும், இயக்குநருமான நடாவ் லாபிட் பேசும்போது, “வெறுப்புணர்வைத் தூண்டும் மோசமான பிரச்சார படமான ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது எனக்கு அதிர்ச்சியையும் குழப்பத்தையும் கொடுத்தது. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தால் நாங்கள் அனைவரும் கலக்கமும் அதிர்ச்சியும் அடைந்தோம். இது போன்ற மதிப்புமிக்க திரைப்பட விழாவின் கலை, போட்டிப் பிரிவினருக்குப் பொருத்தமற்ற ஒரு பிரச்சார, மோசமான திரைப்படமாக இது எங்களுக்குத் தோன்றியது. விமர்சனத்தை இந்த விழா உண்மையாக ஏற்றுக்கொள்ளும் என்பதால், வெளிப்படையான மனக்கசப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.