Published : 17 Jan 2022 01:48 PM
Last Updated : 17 Jan 2022 01:48 PM

இசைக்கும் நாட்டியத்திற்கும் தன் ஆயுளை அர்ப்பணித்துக் கொண்டவர் பிர்ஜு மகாராஜ்: கமல்ஹாசன் புகழஞ்சலி

"இசைக்கும் நாட்டியத்திற்கும் தன் ஆயுளை அர்ப்பணித்துக் கொண்டவர்" என்று கதக் நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜு மகாராஜ் மறைவுக்கு கமல்ஹாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

கதக் நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜு மகாராஜ் நேற்று (ஜன. 16) இரவு காலமானார். அவருக்கு வயது 83. டெல்லியில் உள்ள தனது வீட்டில் பேரப்பிள்ளைகளுடன் நேற்றிரவு விளையாடிக் கொண்டிருந்த போது பிர்ஜு மகாராஜ் திடீரென மயங்கி விழுந்துள்ளார். வீட்டில் உள்ளோர் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கே அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பிர்ஜு மகாராஜ் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர். சமீப காலமாக சிறுநீரகக் கோளாறு காரணமாக பிர்ஜு மகாராஜ் டயாலிசிஸ் சிகிச்சைப் பெற்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ படத்தில் இடம்பெற்ற ‘உனைக் காணாது’ என்ற பாடலுக்கு நடனப் பயிற்சி கொடுத்தவர் பிர்ஜு மகாராஜ். இப்பாடலுக்காக சிறந்த நடன இயக்கத்துக்கான தேசிய விருதை பிர்ஜு மகாராஜ் பெற்றார்.

இந்நிலையில் பிர்ஜு மகாராஜின் மறைவுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பதிவில், “ஈடு இணையற்ற நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைந்தார்.ஓர் ஏகலைவனைப் போல பல்லாண்டுகள் தொலைவிலிருந்து அவதானித்தும்,விஸ்வரூபம் படத்திற்காக அருகிருந்தும் நான் கற்றுக்கொண்டவை ஏராளம். இசைக்கும் நாட்டியத்திற்கும் தன் ஆயுளை அர்ப்பணித்துக்கொண்டவரே, ‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே’” என்று கூறியுள்ளார்.

இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x