என் மகளை கேலி செய்வதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது: அபிஷேக் பச்சன் காட்டம்

என் மகளை கேலி செய்வதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது: அபிஷேக் பச்சன் காட்டம்
Updated on
1 min read

தன் மகள் ஆராத்யாவை கேலி செய்வதை தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று நடிகர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் பிரபலங்கள் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் தம்பதியின் மகள் ஆராத்யா பச்சன். கடந்த மாதம் ஆராத்யாவின் 10-வது பிறந்த நாளை முன்னிட்டு மாலத்தீவுக்குக் குடும்பத்துடன் சுற்றுலா சென்ற அபிஷேக் பச்சன், அங்கு தனது மகளின் பிறந்த நாளை பிரம்மாண்டமான முறையில் கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

ரசிகர்கள் பலரும் ஆராத்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். எனினும் நெட்டிசன்களில் சிலர் ஆராத்யாவைப் பற்றியும், அபிஷேக் பச்சன் குடும்பத்தைப் பற்றியும் கேலி செய்திருந்தனர்.

இதனிடையே சமீபத்தில் ஒரு தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்த அபிஷேக் பச்சன் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு காட்டமாக பதிலளித்துள்ளார்.

அதில் அவர் கூறும்போது, ''ஆராத்யாவை கேலி செய்வதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். அது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம். ஒரு பிரபலமாக நான் விமர்சனங்களை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். ஆனால், என் மகளை கேலி செய்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆராத்யாவை கேலி செய்பவர்கள் தைரியம் இருந்தால் என் முகத்துக்கு நேரே அதைச் செய்து பார்க்கட்டும்'' என்று அபிஷேக் பச்சன் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in