கரோனா தொற்று பாதிப்பு: மகாபாரதம் தொடரில் நடித்த சதீஷ் கவுல் மறைவு

கரோனா தொற்று பாதிப்பு: மகாபாரதம் தொடரில் நடித்த சதீஷ் கவுல் மறைவு

Published on

மகாபாரதம் தொடரில் இந்திரனாக நடித்துப் புகழ்புற்ற சதீஷ் கவுல் மறைந்தார். அவருக்கு வயது 74.

1970ஆம் ஆண்டு தனது திரைப்பயணத்தை தொடங்கிய சதீஷ் கவுல் இதுவரை பஞ்சாபி, இந்தி என 300க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு பஞ்சாப் அரசு இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தது. இந்தியில் தேவ் ஆனந்த் தொடங்கி ஷாரூக் கான் வரை பல சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்தவர்.

இவரைப் பஞ்சாபின் அமிதாப் பச்சன் என்றும் இவரை ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சதீஷுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்று நேற்று (ஏப்.10) அவர் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

சதீஷ் கவுல் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in