Published : 09 Apr 2021 10:42 AM
Last Updated : 09 Apr 2021 10:42 AM

இந்த வருடம் 'ராதே' வெளியாகுமா? -சல்மான் கான் பதில்

'ராதே' திரைப்படம் இந்த வருடம் ரம்ஜான் தினத்தில் வெளியாகுமா என்கிற சந்தேகத்துக்கு நடிகர் சல்மான் கான் பதிலளித்துள்ளார்.

'தபங் 3' படத்தைத் தொடர்ந்து, மீண்டும் சல்மான் கான் - பிரபுதேவா கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘ராதே’. இப்படத்தில் திஷா படானி, ரன்தீப் ஹூடா, பரத், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் 'வெடரன்' என்கிற தென்கொரியப் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் ஆகும்.

இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு வந்தது. இதனிடையே ஓடிடியில் வெளியிடுவதற்காகப் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகத் தகவல் வெளியானது.

இது திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், சல்மான் கான் இந்தத் தகவலை மறுத்து திரையரங்கில் தான் 'ராதே' வெளியாகும் என்று தெரிவித்தார். பலமுறை வெளியீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ரம்ஜான் விடுமுறையைக் கணக்கில் கொண்டு வரும் மே 13-ம் தேதி 'ராதே' வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனால் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதத்தில் நிலைமை கட்டுக்குள் வரவில்லையென்றால் மே மாதமும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் சூழல் நிலவுகிறது. இதனால் அறிவித்தபடி, ராதே மே 13 அன்று வெளியாகுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

புதன்கிழமை அன்று நடிகர் கபீர் பேடி, தனது சுயசரிதையை விளம்பரப்படுத்தும் நோக்கில் பிரபல நட்சத்திரங்களுடன் உரையாடும் காணொலியை வெளியிட்டார். இதில் சல்மான் கானுடனான உரையாடலில் ராதே வெளியீட்டைப் பற்றி பேடி கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்திருக்கும் சல்மான், "இந்த ஈகைத்திருநாளுக்கு ராதே திரைப்படத்தை வெளியிட நாங்கள் முடிவெடுத்து, முயற்சித்து வருகிறோம். ஊரடங்கு தொடர்ந்தால் படம் அடுத்த வருட ஈகைத் திருநாளுக்கு வெளியாகும்.

ஆனால் தொற்று குறைந்து, மக்கள் ஒழுங்காக முகக் கவசம் அணிந்து, சமூக விலகலைப் பேணி, அரசின் விதிகளை மீறாமல் இருந்தால் இந்த இரண்டாம் அலை சீக்கிரம் ஓயும். அப்படி ஓயும்பட்சத்தில் ராதே இந்த ஈகைத் திருநாளன்றே திரையரங்குகளில் வெளியாகும்" என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x