ஓடிடி வெளியீட்டால் எந்தவித ஏமாற்றமும் இல்லை: ‘தி பிக் புல்’ திரைப்படம் குறித்து இலியானா பகிர்வு

ஓடிடி வெளியீட்டால் எந்தவித ஏமாற்றமும் இல்லை: ‘தி பிக் புல்’ திரைப்படம் குறித்து இலியானா பகிர்வு
Updated on
1 min read

‘தி பிக் புல்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாவதில் தனக்கு எந்தவித ஏமாற்றமும் இல்லை என்று இலியானா கூறியுள்ளார்.

அஜய் தேவ்கன் தயாரிப்பில் அபிஷேக் பச்சன், இலியானா நடித்துள்ள படம் ‘தி பிக் புல்’. 1992ஆம் இந்தியாவை உலுக்கிய பங்குச் சந்தை ஊழல்களுக்குக் காரணகர்த்தாவாக இருந்த ஹர்சத் மேத்தாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

ஏற்கெனவே இதே கதையை அடிப்படையாகக் கொண்டு ‘ஸ்கேம்: 1992’ என்ற தொடர் ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. எனவே, தற்போது ‘தி பிக் புல்’ படத்தை பற்றிய அறிவிப்பு வெளியானதும் இரண்டையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கிண்டல் செய்யத் தொடங்கினர்.

இந்நிலையில் இந்த ஒப்பீடு குறித்து நடிகை இலியானா ஐஏன்என்எஸ் நிறுவனத்திடம் கூறியதாவது:

''ஒப்பீடுகளைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. அனைவருக்கும் கருத்து சொல்ல உரிமையுண்டு. ஒரு படம் வெளியாகிறதென்றால் அது 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ ஒரு படத்தைப் போல இருப்பது இயல்புதான். மக்கள் எப்போதும் தங்கள் கருத்துகளைக் கூறத்தான் செய்வார்கள். நம்மால் எல்லோருக்கும் பிடித்தபடி படம் எடுக்க முடியாது. சிலருக்குப் பிடிக்கலாம், பிடிக்காமல் போகலாம்.

இப்படம் ஓடிடியில் நேரடியாக வெளியாவதில் எனக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. இதுவும் ஒருவகையில் நல்லதுதான். நம்மால் ஏராளமான மக்களைச் சென்றடைய முடியும். என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு வீட்டில் உட்கார்ந்து கொண்டு படம் பார்ப்பதுதான் பிடிக்கும். என்னைப் போலவே பலரும் இருப்பார்கள் என்று நம்புகிறேன். ஓடிடியில் வெளியாகும் என் முதல் படம் இது. இதுவும் ஒரு அனுபவம்தான்''.

இவ்வாறு இலியானா கூறியுள்ளார்.

இப்படம் வரும் ஏப்ரல் 8ஆம் தேதி அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in