

கவுன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்வியும், அது குறித்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அமிதாப் பச்சனின் பேச்சும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
கடந்த 20 வருடங்களாக நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி கவுன் பனேகா க்ரோர்பதி (கேபிசி). கடந்த செப்டம்பர் மாதம் இந்நிகழ்ச்சியின் 12வது சீஸன் ஒளிபரப்பாக ஆரம்பித்தது. இதற்கு முன் இந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகள் சில சமயங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
அப்படி கடந்த வாரம் சமூக ஆர்வலர் பேஜாவாடா வில்ஸனும், நடிகர் அனூப் சோனியும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட பகுதியில் ரூ. 6,40,000 பரிசுத் தொகைக்கான கேள்வியால் தான் பிரச்சினை எழுந்துள்ளது.
டிசம்பர் 25, 1927 அன்று, டாக்டர் அம்பேத்கரும், அவரது ஆதரவாளர்களும் எந்த புத்தகத்தை எரித்தனர்
ஏ) விஷ்ணு புராணம் பி) பகவத் கீதை சி) ரிக்வேதம் டி) மனுஸ்மிருதி
இதற்கான சரியான விடையான மனுஸ்மிருதியைத் தேர்ந்தெடுத்து வென்ற பின் அமிதாப் பச்சன், "1927ஆம் ஆண்டு, டாக்டர் அம்பேத்கர், பண்டைய இந்து நூலான மனுஸ்மிருதியில், சமூகத்தில் தீண்டாமை மற்றும் பாகுபாடை சித்தாந்த ரீதியில் நியாயப்படுத்தியிருந்ததாக அதைக் கண்டித்தார். அதன் பிரதிகளையும் எரித்தார்" என்று பேசினார்.
இது ஒரு சிலரை காயப்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சி இடது சாரி கொள்கை பிரச்சாரத்தை மேற்கொள்கிறது என ஒரு சிலர் குற்றம்சாட்டி இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இன்னும் சிலர் இந்துக்களின் உணர்வுகள் இதனால் புண்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளனர்.
ஹேட் ஸ்டோரி, டாஷ்கெண்ட் ஃபைல்ஸ் ஆகிய திரைப்படங்களின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இந்தக் கேள்வியின் காணொலியைப் பகிர்ந்து, "கேபிசி நிகழ்ச்சி கம்யூனிஸ்டுகளால் கடத்தப்பட்டுள்ளது. கலாச்சார ரீதியிலான யுத்தங்கள் இப்படித்தான் வெல்லப்பட வேண்டும் என அப்பாவிக் குழந்தைகள் இப்படித்தான் கற்றுக் கொள்வார்கள். இதன் பெயர் தான் குறியீடு" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், அமிதாப் பச்சன் ஆகியோருக்கு எதிராக லக்னோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.