மீண்டும் இணையும் 'சிம்பா' கூட்டணி

மீண்டும் இணையும் 'சிம்பா' கூட்டணி
Updated on
1 min read

'சிம்பா' படத்துக்குப் பிறகு இயக்குநர் ரோஹித் ஷெட்டியும், நடிகர் ரன்வீர் சிங்கும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைகின்றனர்.

இயக்குநர் ரோஹித் ஷெட்டி வண்ணமயமான, பிரம்மாண்டமான பாலிவுட் மசாலா திரைப்படங்களுக்குப் பெயர் பெற்றவர். 'கோல்மால்' திரைப்பட வரிசையோடு சேர்த்து, 'சிங்கம்', 'சிங்கம் ரிட்டர்ன்ஸ்', 'சிம்பா' என்று அவருக்கென தனியாக ஒரு போலீஸ் திரைப்பட வரிசையை உருவாக்கி தற்போது அந்த வரிசையில் புதிதாக அக்‌ஷய் குமார் நடிப்பில் 'சூர்யவன்ஷி' என்கிற திரைப்படத்தையும் இயக்குகிறார். இவரது பெரும்பான்மையான திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றவை என்பதால் சூர்யவன்ஷி திரைப்படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

'டெம்பர்' என்கிற தெலுங்கு படத்தின் ரீமேக்கான 'சிம்பா'வும் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் சிம்பா நாயகன் ரன்வீர் சிங்குடன் ரோஹித் ஷெட்டி மீண்டும் ஒரு படத்தில் இணைகிறார். இது குல்ஸார் இயக்கத்தில் 1982-ம் ஆண்டு வெளியான 'அங்கூர்' என்கிற இந்திப் படத்தின் சம கால ரீமேக்காக இருக்கும் என்று தெரிகிறது.

முன்னதாக சில ஆண்டுகளுக்கு முன்பே 'அங்கூர்' திரைப்படத்தை ஷாரூக் கானை நாயகனாக வைத்து இயக்க ரோஹித் ஷெட்டி முயற்சி செய்து நடக்கவில்லை. தொடர்ந்து அவர் 'கோல்மால் அகைன்', 'சிம்பா' ஆகிய படங்களை இயக்குவதில் மும்முரமானார். தற்போது ஊரடங்கு காலத்தில் தனது நவீன அங்கூர் திரைக்கதையை ரோஹித் ஷெட்டி மெருகேற்றியதாகவும், தனது முந்தைய படங்கள் போலவே பிரம்மாண்டமான படைப்பாக இதை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2 ஜோடி இரட்டையர்கள் பிறக்கும் போது பிரிந்து விடுகின்றனர். வளர்ந்த பின்பு இவர்கள் சந்திப்பதால் ஏற்படும் குழப்பங்களே இந்தக் கதை. ஒரு ஜோடி இரட்டையராக ரன்வீர் சிங் நடிக்கிறார். அவருக்கு முதல் இரட்டை வேடம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற நடிகர் நடிகையர் தேர்வு, படக்குழு பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அங்கூர் ரீமேக்கைத் தொடர்ந்து ரோஹித் ஷெட்டி 'கோல்மால் 5' மற்றும் அடுத்த 'சிங்கம்' திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in