

போதைப் பொருள் வழக்கு விசாரணையின்போது ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன் உள்ளிட்டோரின் செல்போன்களைப் பறிமுதல் செய்ததாக என்சிபி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மர்ம மரணம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின்போது, சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரவர்த்தி சுஷாந்துக்குத் தெரியாமலேயே போதைப் பொருள் கொடுத்து, அவரது மனநிலையைப் பாதிக்கச் செய்ய முயன்றதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக ரியா மற்றும் அவரது சகோதரர் ஷோவிக் உட்பட 12 பேரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாலிவுட் பிரபலங்கள் வாட்ஸ் அப்பில் போதைப் பொருட்கள் குறித்து உரையாடியதாக செல்போன் ஸ்க்ரீன்ஷாட்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
அதன்பேரில் நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன், ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் உள்ளிட்டோருக்கு என்சிபி சம்மன் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் (25.09.20) ரகுல் ப்ரீத் சிங், நேற்று (26.09.20) தீபிகா, சாரா, ஷ்ரத்தா உள்ளிட்டோரும் என்சிபி அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
விசாரணையின்போது நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன், தீபிகாவின் மேலாளர் கரிஷ்மா ஆகியோரிடமிருந்து செல்போன்களைப் பறிமுதல் செய்ததாக என்சிபி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் ஆதாரங்களுக்காக அவர்களது செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் இருந்துதான் அவர்கள் போதைப் பொருட்கள் குறித்து உரையாடியதாகக் கூறப்படுகிறது.