என்னுடைய பணியிடம் ஒரு பிணவறையாக மாற்றப்பட்டுவிட்டது: கங்கணா ஆதங்கம்

என்னுடைய பணியிடம் ஒரு பிணவறையாக மாற்றப்பட்டுவிட்டது: கங்கணா ஆதங்கம்
Updated on
1 min read

நடிகர் சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் பாலிவுட்டில் நிலவி வரும் மாபியா விவகாரம், போதைப் பொருள் விவகாரம் குறித்து நடிகை கங்கணா வெளிப்படையாகப் பேசியிருந்தார். இதற்கு மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இதனால் கங்கணா ரணாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார். மேலும், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் - கங்கணா ரணாவத் இடையே வார்த்தைப் போரும் நடந்தது.

இதனைத் தொடர்ந்து மும்பை பாந்த்ராவில் உள்ள கங்கணா அலுவலகத்தின் சில பகுதிகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளன என்று கூறி இடிக்கப்பட்டது. மும்பை மாநகராட்சியின் இந்தச் செயலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில், கங்கணாவின் வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்தார். இந்த விவகாரம் ஊடகங்களில் தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது.

இந்நிலையில் இடிக்கப்பட்ட தனது கட்டிடத்தின் புகைப்படங்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த கங்கணா, தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

''என் கனவு, எதிர்காலம், சுயமரியாதை ஆகியவற்றுக்கு எதிரான வன்முறை இது. என்னுடைய பணியிடம் ஒரு பிணவறையாக மாற்றப்பட்டுவிட்டது. எத்தனை பேர் வேலையிழந்துள்ளனர் என்று தெரியவில்லை. ஒரு திரைப்படக் குழுவிலிருந்து நூற்றுக்கணக்கானோருக்கு வருமானம் கிடைக்கிறது. ஒரு படம் வெளியானால் திரையரங்கிலிருந்து பாப்கார்ன் விற்பவர் வரை அனைவருக்கும் உணவு கிடைக்கும். எங்களிடமிருந்து எங்கள் வருமானத்தைப் பறித்துவிட்டு இன்று (செப் 17) தேசிய வேலையிழப்பு நாளைக் கொண்டாடுகின்றனர்''.

இவ்வாறு கங்கணா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in