கைது நடவடிக்கைக்கு ரியா தயாராகவே இருக்கிறார் - வழக்கறிஞர் தகவல்

கைது நடவடிக்கைக்கு ரியா தயாராகவே இருக்கிறார் - வழக்கறிஞர் தகவல்
Updated on
1 min read

நடிகர் சுஷாந்த் சிங்கின் உடல், மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த ஜூன் 14-ம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதன் தொடர்பாக சிபிஐ நடத்திய விசாரணையில், சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபர்த்தி உட்பட அவருக்கு நெருக்கமான சிலர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இது தொடர்பாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தனியாக வழக்குப் பதிவு செய்து, ரியா சக்ரபர்த்தியின் சகோதரர் ஷோயிக் சக்ரபர்த்தி மற்றும் சுஷாந்த் சிங்கின் மேலாளர் சாமுவேல் மிரண்டா ஆகியோரைக் கைது செய்தனர்.

இருவரையும் வரும் 9-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்கப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு மும்பை மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து ரியா சக்ரபர்த்தியிடமும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தியுள்ளது.

இந்நிலையில் ஒருவரை காதலிப்பது குற்றமா என்று ரியாவின் வழக்கறிஞரான சதீஷ் மானஷிண்டே கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

போலீஸாரின் கைது நடவடிக்கைக்கு ரியா தயாராகவே இருக்கிறார். ஒருவரை காதலிப்பது குற்றமா? அப்படி குற்றமென்றால் தன் காதலின் விளைவுகளை அவர் எதிர்கொள்வார்.

தன் மீது எந்த தவறும் இல்லாததால் தான் பிஹார் போலீஸாரால் பதியப்பட்ட இந்த வழக்கில் அவர் இதுவரை முன் ஜாமீன் கேட்டு எந்த நீதிமன்றத்தையும் அணுகவில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in