பாலிவுட் இயக்குநரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: காவல்துறை நடவடிக்கை

பாலிவுட் இயக்குநரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: காவல்துறை நடவடிக்கை

Published on

பிரபல பாலிவுட் இயக்குநர் மகேஷ் மஞ்சரேக்கரை மிரட்டி, பணம் பறிக்க முற்பட்ட ஒருவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.

தேசிய விருது பெற்ற இயக்குநர் மகேஷ் மஞ்சரேக்கர், 'விருத்', 'வாஸ்தவ்: தி ரியாலிட்டி', 'ஆஸ்திவா' உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவருக்குச் சமீபத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில், தன்னை நிழலுலக தாதா அபு சலீமின் கூட்டாளி என்று கூறிக்கொண்ட ஒருவர, இயக்குநர் மகேஷ் மஞ்சரேக்கரை மிரட்டி ரூ.35 கோடி வேண்டும் என்று கேட்டுள்ளார். அந்த நபரைக் கண்டுபிடித்துக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாலிவுட் பிரபலங்களை மிரட்டிப் பணம் கேட்பது இது முதல் முறையல்ல. 2017-ம் ஆண்டு நடிகர் ஆதித்யா பஞ்சோலியை மிரட்டி ஒரு நபர் ரூ.25 லட்சம் கேட்டுள்ளார்.

இதுகுறித்துக் காவல்துறையிடம் புகார் அளித்திருந்த ஆதித்யா, அந்த நபர் தன்னை முன்னா புஜாரி என்று அறிமுகம் செய்து கொண்டதாகவும், அக்டோபர் 18, 2017லிருந்து அந்த நபர் தனக்குக் குறுஞ்செய்திகள் அனுப்பி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் ஆதித்யா தனக்குப் பணம் அனுப்ப வேண்டிய வங்கிக் கணக்கு எண்ணையும் அந்த நபர் அனுப்பியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in