பாலிவுட்டை விட்டுத்தான் விலகுகிறேன்; சினிமாவிலிருந்து அல்ல: அனுபவ் சின்ஹா விளக்கம்

பாலிவுட்டை விட்டுத்தான் விலகுகிறேன்; சினிமாவிலிருந்து அல்ல: அனுபவ் சின்ஹா விளக்கம்
Updated on
1 min read

‘ரா ஒன்’, ‘முல்க்’, ‘ஆர்டிகிள் 15’, ‘தப்பட்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அனுபவ் சின்ஹா. இதில் ‘ரா ஒன்’ தவிர மற்ற அனைத்துத் திரைப்படங்களும் முக்கிய சமூகப் பிரச்சினைகளை ஆழமாகப் பேசியவை. கடைசியாக வெளிவந்த ‘தப்பட்’ திரைப்படம் பலராலும் பாராட்டப்பட்டது.

புலம்பெயர் தொழிலாளர் பிரச்சினை தொடங்கி சுஷாந்த் தற்கொலை விவகாரம் வரை அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அனுபவ் சின்ஹா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய் (21.07.20) அன்று தான் பாலிவுட்டை விட்டு விலகப்போவதாக ட்விட்டர் பக்கத்தில் அனுபவ் சின்ஹா தெரிவித்திருந்தார். அவரது இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பலரும் அனுபவ் சின்ஹாவின் சமூக வலைதளப் பக்கங்களில் அவரது முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

இதனிடையே நேற்று (22.07.2020) தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து அனுபவ் சின்ஹா கூறியிருப்பதாவது:

''நிச்சயமாக நான் தொடர்ந்து படங்களை இயக்குவேன். இன்னும் அதிகமாக. ஆனால் என்னுடைய படமாக்கல் முறையை பெருமளவில் மாற்றவுள்ளேன். பாலிவுட்டை விட்டு மட்டும்தான் விலகுகிறேன். சினிமாவை விட்டு அல்ல. இதுகுறித்து விரிவாக நேரம் வரும்போது சொல்கிறேன்''.

இவ்வாறு அனுபவ் சின்ஹா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in