அபத்தத்தை எழுதாதீர்கள்; நியாயமாக இருங்கள்: விமர்சகர்களைக் கடுமையாகச் சாடிய சேத்தன் பகத்

அபத்தத்தை எழுதாதீர்கள்; நியாயமாக இருங்கள்: விமர்சகர்களைக் கடுமையாகச் சாடிய சேத்தன் பகத்
Updated on
1 min read

அபத்தத்தை எழுதாதீர்கள், நியாயமாக இருங்கள் என்று எழுத்தாளர் சேத்தன் பகத் விமர்சகர்களைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். இவரது மறைவுக்குப் பிறகு பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை பெரிதாக வெடித்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு முன்னணி பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே சுஷாந்த் சிங் நடிப்பில் உருவாகியுள்ள கடைசிப் படமான 'தில் பெச்சாரா', ஜூலை 24-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இலவசமாக வெளியாகவுள்ளது. முகேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தை முன்வைத்து விமர்சகர்களைக் கடுமையாகச் சாடியுள்ளார் முன்னணி எழுத்தாளரும் இந்தி திரையுலகின் கதாசிரியருமான சேத்தன் பகத்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

"சுஷாந்தின் கடைசிப் படம் இந்த வாரம் வெளியாகிறது. பகட்டான, உயர் மட்டத்தை மட்டும் நம்பும் விமர்சகர்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உணர்வுபூர்வமாக எழுதுங்கள். உங்களை அதிக புத்திசாலியாகக் காட்டிக் கொள்ளாதீர்கள்.

அபத்தத்தை எழுதாதீர்கள். நியாயமாக இருங்கள். உங்கள் மோசமான உத்திகளை முயற்சிக்காதீர்கள். ஏற்கெனவே நீங்கள் போதுமான அளவு பலரின் வாழ்க்கையை நாசப்படுத்திவிட்டீர்கள். இப்போது நிறுத்துங்கள். நாங்கள் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்".

இவ்வாறு எழுத்தாளர் சேத்தன் பகத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in