'ஸோயா ஃபேக்டர்' படம் ஓடாததற்குக் காரணம் என்ன? - இயக்குநர் அபிஷேக் சர்மா பகிர்வு

'ஸோயா ஃபேக்டர்' படம் ஓடாததற்குக் காரணம் என்ன? - இயக்குநர் அபிஷேக் சர்மா பகிர்வு
Updated on
1 min read

தனது 'ஸோயா ஃபேக்டர்' படம் நன்றாக ஓடாததற்குக் காரணம் அந்த நேரத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த இரண்டு படங்கள் தான் என இயக்குநர் அபிஷேக் ஷர்மா கூறியுள்ளார்.

'தேரே பின்லேடன்' என்கிற நையாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அபிஷேக் சர்மா. 2019-ம் ஆண்டு துல்கர் சல்மான், சோனம் கபூர் ஆகியோர் நடிப்பில் 'ஸோயா ஃபேக்டர்' என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

செப்டம்பர் மாதம் வெளியான இந்தப் படம் மோசமான விமர்சனங்களையும், ரசிகர்களிடையே மிகச் சுமாரான வரவேற்பையும் பெற்றது. அந்த காலகட்டத்தில் தான் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் 'சிச்சோரே', ஆயுஷ்மன் குரானாவின் 'ட்ரீம் கேர்ள்' ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தன.

எனவே அதே சமயத்தில் வெளியான ஸோயா ஃபேக்டரைப் பார்க்க, பணம் செலவழிக்க ரசிகர்கள் விரும்பவில்லை என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் அபிஷேக் கூறியுள்ளார்.

மேலும் இந்த இரண்டு படங்களில் எதாவது ஒரு படம் மட்டும் இருந்திருந்தால் 'ஸோயா ஃபேக்டர்' ஓடியிருக்கும் என்றும், முதல் நாளிலிருந்தே வரவேற்பைப் பெறாத படம் வாய்வார்த்தை மூலமாக பிரபலமாகும் வாய்ப்பை இழந்துவிட்டது என்றும் அபிஷேக் கூறியுள்ளார்.

செப்டம்பர் முதல் வாரத்தில் 'சிச்சோரே' படமும், இரண்டாவது வாரம் 'ட்ரீம் கேர்ள்' படமும் வெளியானது. இரண்டு படங்களுமே 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தன. 'ஸோயா ஃபேக்டர்' படம் 7 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in