நலம்பெற குவிந்த வாழ்த்துகள்: அமிதாப் பச்சன் நெகிழ்ச்சி

நலம்பெற குவிந்த வாழ்த்துகள்: அமிதாப் பச்சன் நெகிழ்ச்சி
Updated on
1 min read

பூரண நலம்பெற வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது ட்விட்டர் பதிவில் நன்றி தெரிவித்துள்ளார் அமிதாப் பச்சன்.

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சனுக்கு கரோனா தொற்று உறுதியானது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரைத் தொடர்ந்து மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அமிதாப் பச்சன் - அபிஷேக் பச்சன் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐஸ்வர்யா ராய் - ஆராத்யா இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர்.

அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினருக்குக் கரோனா தொற்று உறுதியானவுடன், அரசியல் கட்சிப் பிரபலங்கள், முன்னணி நடிகர்கள், தொழில்துறை பிரபலங்கள் எனப் பலரும் அமிதாப் பச்சன் குடும்பத்தினர் பூரண நலம்பெற வாழ்த்து தெரிவித்தார்கள்.

தற்போது இது தொடர்பாக அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"எனக்கும், அபிஷேக், ஐஸ்வர்யா, ஆராத்யாவுக்கும் பிரார்த்தனைகளை, தங்கள் கவலைகளைத் தெரிவித்த அனைவருக்கும் அளவற்ற அன்பும் நன்றியும். எங்கள் மீது அக்கறை காட்டும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகப் பதில் சொல்வது எனக்குச் சாத்தியப்படாது. அதனால் நான் என் கைகளைக் கூப்பி வணங்கி, உங்கள் அன்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in