

பிரபல பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி மும்பையில் உள்ள தனக்குச் சொந்தமான ஹோட்டல்களில் கரோனா பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவல்துறையினர் தங்கிக்கொள்ள ஏற்பாடு செய்தார்.
கரோனா பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் அந்த ஹோட்டல்களையே தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ரோஹித் ஷெட்டியின் இந்தச் சேவைக்கு மும்பை காவல்துறை நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மும்பை காவல்துறையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
''கோவிட்-19 பெருந்தொற்று பரவத் தொடங்கியது முதல் தொடர்ந்து காக்கி உடையில் இருக்கும் ஆண்கள், பெண்களுக்குத் தன்னுடைய உதவியை நல்கி வரும் ரோஹித் ஷெட்டிக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மும்பை வீதிகளில் கரோனா பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் எங்கள் பணியாளர்களின் பயன்பாட்டுக்கு ரோஹித் தனது 11 ஹோட்டல்களை வழங்கியுள்ளார்''.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரோஹித் ஷெட்டி ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘தில்வாலே’, ‘சிங்கம்’, ‘சிம்பா’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சூர்யவன்ஷி’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.