திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாவது ஏமாற்றமளிக்கிறது - கார்னிவல் சினிமாஸ் அறிக்கை

திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாவது ஏமாற்றமளிக்கிறது - கார்னிவல் சினிமாஸ் அறிக்கை
Updated on
1 min read

கரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுவதும் பொதுமக்கள் கூடும் இடங்கள் அனைத்துமே கடந்த 3 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இதில் திரையரங்குகளும் அடங்கும். எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது இதுவரை உறுதியாகவில்லை. இதனால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழித் தயாரிப்பாளர்களுமே கடும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளனர்.

இதனிடையே, லக்‌ஷ்மி பாம், பூஜ், சடக் 2, தில் பெசாரா, பிக் புல், லூட்கேஸ், குதா ஹாஃபிஸ் ஆகிய 7 இந்திப் படங்களின் உரிமையைக் கைப்பற்றி டிஜிட்டல் வெளியீட்டை உறுதி செய்திருக்கிறது டிஸ்னி நிறுவனம்.

இது திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற அறிவிப்புகள் தங்களுக்கு ஏமாற்றமளிப்பதாக கார்னிவல் சினிமாஸ் குழுமம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்கப்படவுள்ள நேரத்தில் திரைப்பட தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் வழியை தேர்ந்தெடுப்பது எங்களுக்கு ஏமாற்றமளிக்கிறது.

பொருளாதாரம் மெல்ல மீண்டு வருகிறது, மால்களும் திறக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவர்கள் தங்கள் திரைப்படங்களை பெரிய திரைகளில் வெளியிட இன்னும் சற்று பொறுமையுடனும், நம்பிக்கையுடனும் இருக்கவேண்டும். அதற்காகத்தானே அவை எடுக்கப்பட்டன?.

ஊரடங்கின் போது பல்வேறு கணக்கெடுப்புகளை நடத்தியதில் மக்கள் திரையரங்குகள் திறப்புக்காக காத்திருப்பதை எங்களால் அறிந்து கொள்ளமுடிந்தது. சினிமாத்துறையை பொறுத்தவரை இங்கு அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்கவேண்டும். திரையரங்குகளுக்காக எடுக்கப்பட்ட படங்கள் ஆன்லைனில் வெளியாவது இந்த ஒட்டுமொத்த அமைப்பின் வளர்ச்சியையே தடுத்துவிடும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in