ஓடிடி தளத்தில் இலவசமாக வெளியாகும் சுஷாந்த் சிங்கின் கடைசிப் படம்

ஓடிடி தளத்தில் இலவசமாக வெளியாகும் சுஷாந்த் சிங்கின் கடைசிப் படம்
Updated on
1 min read

சுஷாந்த் சிங் நடிப்பில் உருவாகியுள்ள 'தில் பெச்சாரா' திரைப்படம் ஓடிடி தளத்தில் இலவசமாக வெளியாகவுள்ளது.

ஜூன் 14-ம் தேதி பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் பாலிவுட்டில் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் உருவாக்கியுள்ளது. இவர் நடிப்பில் கடைசியாக உருவாகியுள்ள படம் 'தில் பெச்சாரா'.

மே மாதம் வெளியாகவிருந்த இந்தப் படம் கரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்டது. இறுதியாக ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், சுஷாந்த் சிங்கின் ரசிகர்களோ அவருடைய இறுதிப்படம் திரையரங்கில்தான் வெளியாக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், 'தில் பெச்சாரா' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகிவிட்டது. ஜூலை 24-ம் தேதி முதல் ஹாட் ஸ்டாரில் இந்தப் படத்தைக் காணலாம். இதில் சிறப்பம்சம் என்னவென்றால், சுஷாந்த் சிங்கின் மறைவை முன்னிட்டும், அவருக்கு சினிமா மீதிருந்த காதலை முன்னிட்டும் இந்தப் படத்தை இலவசமாகக் காணலாம் என்று ஹாட் ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.

முகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தில் பெச்சாரா' படத்தில் சைஃப் அலி கான், சுஷாந்த் சிங், சஞ்சனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in