

சுஷாந்த்தை தனிப்பட்ட முறையில் தெரியாது எனவும் ஆனால் பல மணி நேரங்கள் அழுததாகவும் குறிப்பிட்டுள்ளார் நடிகை இலியானா
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. 'கை போ சே', 'ஷுத் தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்ஷி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி தி அண்ட்லோட் ஸ்டோரி' (MS Dhoni: The Untold Story) திரைப்படம் இவரை மொழிகள் தாண்டி பிரபலமாக்கியது. திடீரென்று தற்கொலை செய்து கொண்டது பாலிவுட் திரையுலகினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர், இந்திய கிரிக்கெட் அணியினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சுஷாந்த் சிங் மறைவு குறித்து நடிகை இலியானா நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பாதாவது:
"கடும் உணர்வு மூட்டத்தில் இந்த நாளை கடந்தேன். பல மணி நேரங்கள் தொடர்ந்து அழுதேன். எனக்கு சுஷாந்தை தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆனால் இந்த இழப்பு என்னை மிகவும் ஆழமாகப் பாதித்து விட்டது. அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும், அன்பானவர்களுக்கும், என்னால் ஆழ்ந்த இரங்கலை மட்டுமே தெரிவிக்க முடியும். உங்களுக்கு ஏற்பட்டுள்ள வலியை என்னால் கற்பனை கூட செய்து பார்க்கமுடியவில்லை.
நான் சொல்லவேண்டியது ஏராளமாக உள்ளது. நாம் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டிருக்கிறோம். அதாவது மனிதர்களாகிய நாம் அனைவருமே, நாம் நம் உணர்வுகளை மறைக்கவே விரும்புகிறோம் ஆனால் சில சமயம் அவை இதயத்திலிருந்து அழுகையாக வெடித்து வெளியே வந்துவிடுகின்றன.
நாம் நன்றாக இருக்கிறோம் என்று சொல்கிறோம் ஆனால் 'நான் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்.. ப்ளீஸ் காப்பாற்றுங்கள்' என்று அலறவே நாம் ஆசைப்படுகிறோம். உள்ளே நம்மை தின்று கொண்டிருக்கும் வலியை மறைத்து புன்னகை செய்கிறோம். அதை யாரும் பார்க்காத போது நான் சுக்குநூறாக உடைந்து நொறுங்கிப் போகிறோம்..
நாம் மனிதர்கள்.. நாம் தோற்றுப் போனவர்கள்.
சரியாக இல்லாமல் இருப்பது ஒன்றும் தவறல்ல.
ஆனால் அப்படியே இருந்துவிடுவது தாம் தவறு.
உதவி கேட்பது பலவீனம் என்று அர்த்தம் அல்ல.
நீங்கள் தனி நபர் அல்ல.
எனக்கு அந்த உணர்வு நன்றாகவே புரியும்..
நான் இங்கே பிரசங்கம் செய்ய வரவில்லை..
உங்கள் அனைவரிடமும் நான் கேட்பது தயவுசெய்து அன்போடு இருங்கள் என்பது தான்.
இந்த உலகுக்கு உங்கள் அன்பு அதிகமாக தேவை..
உங்கள் அதீத இரக்கமும், அதீத அன்பும் தேவை.
உங்களுக்குப் புரியவில்லை என்றாலும் அன்போடு இருங்கள்"
இவ்வாறு இலியானா தெரிவித்துள்ளார்