ஊரடங்கால் மன அழுத்தம்: ‘க்ரைம் பேட்ரோல்’ நடிகை தற்கொலை

ஊரடங்கால் மன அழுத்தம்: ‘க்ரைம் பேட்ரோல்’ நடிகை தற்கொலை
Updated on
1 min read

‘க்ரைம் பேட்ரோல்’ தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்த நடிகை ப்ரெக்‌ஷா மேத்தா தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 25.

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள தனது வீட்டில் ப்ரெக்‌ஷா மேத்தா மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை போலீஸார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ''எங்களுடைய முதற்கட்ட விசாரணையில் ப்ரெக்‌ஷா கடும் மன அழுத்தத்தில் இருந்தது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளோம்'' என்றனர்.

ஊரடங்குக்கு முன்பாக மும்பையில் இருந்து இந்தூர் வந்த ப்ரெக்‌ஷா, படப்பிடிப்புகள் அனைத்தும் நின்றுபோன நிலையில் வேலை எதுவும் இல்லாததால் கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடைசியாக அவர் பதிவிட்ட ஒரு புகைப்படத்தில் ‘கனவில் மரணம் ஏற்படுவது கொடுமையான ஒன்று’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘க்ரைம் பேட்ரோல்’ தவிர்த்து ‘லால் இஷ்க்’, ‘மேரி துர்கா’ உள்ளிட்ட தொடர்களிலும் ப்ரெக்‌ஷா நடித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இதேபோல மன்மீட் க்ரெவால் என்ற தொலைக்காட்சி நடிகர் ஊரடங்கால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in