தூர்தர்ஷனைத் தொடர்ந்து மீண்டும் ஸ்டார் ப்ளஸ் சேனலில் ஒளிபரப்பாகும் ராமாயணம்

தூர்தர்ஷனைத் தொடர்ந்து மீண்டும் ஸ்டார் ப்ளஸ் சேனலில் ஒளிபரப்பாகும் ராமாயணம்
Updated on
1 min read

ராமானந்த் சாகர் தயாரிப்பில் உருவான ‘ராமாயணம்’ தொடர், 1987-ம் ஆண்டில் தூர்தர்ஷனில் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரந்தோறும் ஒளிபரப்பானது.

இதில் இந்தி நடிகர் அருண் கோவில் ராமராகவும், நடிகை தீபிகா சீதையாகவும், குத்துச்சண்டை வீரர் தாரா சிங் அனுமனாகவும் நடித்திருந்தனர். அப்போதே, நாடு முழுவதும் கோடிக் கணக்கானோர் இந்தத் தொடரைப் பார்த்தனர்.

இப்போது, ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வீட்டில் இருக்கும் மக்கள் பார்க்க வசதியாக தூர்தர்ஷன் தொலைக்காட்சி ‘ராமாயணம்’ தொடரை 33 ஆண்டுகளுக்குப் பின் கடந்த மார்ச் 28-ம் தேதி முதல் மறு ஒளிபரப்பு செய்தது.

உலகிலேயே அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்ற உலக சாதனையை ‘ராமாயணம்’ தொடர் படைத்துள்ளதாக தூர்தர்ஷன் தனது அதிகாரபூர்வ ட்விட்டரில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தூர்தர்ஷனைத் தொடர்ந்து ஸ்டார் ப்ளஸ் சேனலில் மீண்டும் ‘ராமாயணம்’ ஒளிபரப்பாகிறது.

இதுகுறித்து ஸ்டார் ப்ளஸ் சேனல் நிர்வாகம் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், ''அயோத்தி குடிமகன், அனைவராலும் விரும்பப்படுகிற ஸ்ரீராமனின் கதையான ‘ராமாயணம்’ இன்று முதல் தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது'' என்று கூறியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in