வீட்டில் இருப்பது மட்டுமே தீர்வு - கரீனா கபூர்

வீட்டில் இருப்பது மட்டுமே தீர்வு - கரீனா கபூர்
Updated on
1 min read

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30ம்- தேதி நீட்டிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஊரடங்கை 14-ம் தேதிக்குப் பிறகும் நீடிக்கலாமா என்பதுகுறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று (11.04.2020) காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது பெரும்பாலான மாநிலங்களின் முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினர். மகாராஷ்டிராவும் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.

இந்நிலையில் பாலிவுட் நடிகை கரீனா கபூர் மஹாராஷ்டிராவில் ஊரடங்கு நீட்டிக்கட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலை நாம் கடந்து செல்வதற்கான ஒரே தீர்வு வீட்டில் இருப்பது மட்டுமே. நாம் முன்பை விட அதிக உறுதியுடன் இருக்க வேண்டும். இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். நின்று விடக் கூடாது.

இவ்வாறு கரீனா கபூர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in