Published : 11 Nov 2013 12:00 AM
Last Updated : 11 Nov 2013 12:00 AM

படமாகும் சரப்ஜித்சிங் வாழ்க்கை

சரப்ஜித்சிங்... இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த மனிதர். இந்திய எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் காவல்துறையால் சிறைபிடிக்கப்பட்டு, அந்நாட்டு சிறையில் கொடூரத் தாக்குதலால் பலியான சரப்ஜித்சிங்கின் வாழ்க்கை பாலிவுட்டில் படமாக உள்ளது.

பஞ்சாப் மாநில அமிர்தசரசு நகரைச் சேர்ந்தவர் சரப்ஜித் சிங். கடந்த 1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கசூர் எல்லைப் பகுதிக்கு அருகே, இந்திய - பாகிஸ்தான் எல்லையை சட்ட விரோதமாக கடக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு, பாகிஸ்தான் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். மேலும், அங்கு நிகழ்ந்த லாகூர் மற்றும் பைசல்பாத் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு சரப்ஜித் சிங் காரணம் எனக் கூறி, 1991ல் அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது தொடங்கியது அவரது குடும்பத்தின் பாசப் போராட்டம்.

2006ம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், தூக்கு தண்டனையை உறுதி செய்தது. 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம், சரப்ஜித் சிங் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவை, அப்போதைய அதிபர் பர்வேஸ் முஷாரஃப் நிராகரித்தார்.

எனினும், அவரது குடும்பம் நடத்திய கண்ணீர்ப் போராட்டம் பாகிஸ்தான் தேசத்தையே சற்று யோசிக்க வைத்தது.

சரப்ஜித்சிங்கிற்கு கருணை வழங்க வேண்டும் என சரப்ஜித் குடும்பத்தினர் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, அவரைத் தூக்கிலிடுவதை உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்தது. சரப்ஜித்சிங்கிற்கு ஆதரவாக உலகநாடுகள் ஆதரவு தெரிவித்தன.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி, சிறைக்குள் நடந்த மோதலில், சரப்ஜித் சிங் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றார். பாகிஸ்தானில் ஜின்னா மருத்துவமனையில் ஆறு நாள் தீவிர சிகிச்சைக்கு பின் மே 2ம் தேதி உயிரிழந்தார். சரப்ஜித் சிங் 27வயதில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு 49 வயதில் சடலமாக திரும்பியபோது பஞ்சாப் மாநில மக்களின் உச்சக்கட்ட அதிருப்திக்கு ஆளானது காங்கிரஸ்.

உடல் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டபோது பஞ்சாப் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். சரப்ஜித்தின் சொந்த கிராமமான பிகிவிந்துக்கு உடல் கொண்டுசெல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது. சரப்ஜித்தின் மரணத்தையொட்டி பஞ்சாபில் மூன்று நாள்கள் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் மூன்று நாள் ரத்து செய்யப்பட்டன. சரப்ஜித் சிங்கின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணத் தொகையை வழங்கியது பஞ்சாப் மாநில அரசு.

சரப்ஜித் சிங்கின் 22 ஆண்டு சிறைவாசத்தை இரண்டரை மணி நேர சினிமாவாக எடுக்க முனைந்துள்ளார் சுபாஷ் கய். இவரது முக்தாஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனம் 36 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ‘இந்த நேரத்தில் இப்படியொரு படத்தை தங்கள் நிறுவனம் தயாரிக்க கிடைத்தது எங்களுக்கான மிகப்பெரிய கெளரவம்’ என்கிறார் சுபாஷ் கய். இதற்கான ஒப்புதலையும் சரப்ஜித்தின் சகோதரியான தல்பீர்கவுரிடம் அவர் பெற்றுவிட்டார்.

இந்த சென்சிட்டிவ் கதையில் அமிதாப் பச்சன் நடிக்கிறார். வாழ்க்கை நெடுக தன் சகோதரனுக்காக போராடிய சரப்ஜித்சிங்கின் சகோதரி கேரக்டரில் நடிப்பவர் சோனாக்ஷி சின்கா. இரு பெரும் நட்சத்திரங்கள் நடிப்பதால் இப்படம் இந்தியா, பாகிஸ்தான் நாட்டு மக்களை கவனிக்க வைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x