“ஜியோஸ்டாருக்கே உரிமை” - ‘ஜாலி எல்எல்பி 3’ படத்தை சட்டவிரோதமாக ஒளிபரப்ப நீதிமன்றம் தடை!

“ஜியோஸ்டாருக்கே உரிமை” - ‘ஜாலி எல்எல்பி 3’ படத்தை சட்டவிரோதமாக ஒளிபரப்ப நீதிமன்றம் தடை!

Published on

அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியாக உள்ள ‘ஜாலி எல்எல்பி 3’ படத்தை சட்டவிரோதமாக ஸ்ட்ரீம் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

அக்‌ஷய் குமார், அர்ஷத் வார்ஸி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜாலி எல்எல்பி 3’ திரைப்படம் நாளை (செப்.19) திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில் இப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் ஸ்ட்ரீம் செய்வதை தடுக்கக் கோடி ஜியோஸ்டார் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, இப்படத்தை ஸ்ட்ரீம் செய்யும் உரிமை ஜியோஸ்டார் நிறுவனத்துக்கு உள்ளது என்றும் சட்டவிரோத இணையதளங்களை தடுப்பதில் தாமதம் ஏற்பட்டால், ஜியோஸ்டாருக்கு நிதி இழப்பு ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் 20க்கும் மேற்பட்ட சட்டவிரோத தளங்களை அடுத்த 72 மணி நேரத்தில் முடக்கவும், அந்த தளங்களின் உரிமையாளர்கள் குறித்த தகவல்களை இரண்டு வாரங்களில் சமர்ப்பிக்கவும் டெல்லி போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சுபாஷ் கபூர் எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் அக்‌ஷய் குமார், அர்ஷத் வார்ஸி, ஹூமா குரேஷி, அமிர்தா ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதனை ஸ்டார் ஸ்டுடியோ 18, கங்ரா டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in